ஆட்டுக்கறியை புரட்டாசியில் சாப்பிடலாமா? மீன், கோழி? புரட்டாசி மாதம் அசைவம் தவிர்க்க காரணமே இதுதான்
சென்னை: புரட்டாசி மாதம் துவங்கிவிட்ட நிலையில், இந்த மாதம் முழுவதுமே அசைவம் சாப்பிடுவதை இந்துக்கள் தவிர்த்து விடுவார்கள்.. இதற்கு பின்னணியில் ஆன்மீக காரணங்கள் மட்டுமல்ல, அறிவியல் காரணங்களும் நிறையவே சொல்லப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்களிலேயே புரட்டாசி மாதம் சிறப்புக்குரியது.. இது மழை துவங்கும் மாதம் என்பார்கள்.. தமிழ் மாதங்களில் 6வது மாதமாக புரட்டாசி வருகிறது. கன்னி ராசிக்குரிய மாதமாக போற்றப்படுகிறது..

புதன் கிரகம்: அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. புரட்டாசி மாதத்துக்குரிய அதிபதி புதன்.. புதன் மகாவிஷ்ணுவின் சொரூபமாக பார்க்கப்படுகிறது. புதன் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், இந்த புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும் என்பது ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தக்கூடியது..
அறிவியல் காரணம் : இதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. இந்த புரட்டாசி மாதத்தில்தான், வெப்பம், காற்று குறைந்து மழை மெல்ல ஆரம்பிக்கும்.. இதுநாள் வரை சூடாகி, தகித்துக்கிடந்த பூமி, இந்த மாதம் மெல்ல சூட்டை கிளப்பி கொண்டு, உஷ்ணமாக வெளிப்படும். இந்த நேரத்தில் மாமிசம் சாப்பிடுவது பல உபாதைகளுக்கு வழி வகுக்கும்..
புரட்டாசி மாதம் கிளப்பிவிடும் உஷ்ணமானது, வெயில் காலத்தில் சூடான அக்னி நட்சத்திர வெயிலை விட மோசமானது.. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடும்போது, நம்முடைய உடலும் சூடாகி, இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் அதிகரிக்க செய்துவிடும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் கொண்டுவந்து விட்டுவிடும். எப்போதுமே குறைவாக பெய்யும் மழையினால் நோய் தோற்றும் அதிகரித்து, சளி, ஜுரம் அதிகமாக தாக்கும்.
கெட்டக் கொழுப்பு: அதுமட்டுமல்ல, புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும்... பூமியின் இயக்கத்துக்கு தகுந்தபடி நமக்கு செரிமான குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படும்.. இதனால், கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் காலமாகவும் இந்த புரட்டாசி உள்ளது. அதனால்தான், புரட்டாசி தொடங்கியதுமே, அசைவம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர்..
பொதுவாக, புரட்டாசி மாதம் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது... மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும்... அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.. புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது என்பதால், ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications