ஆடி முதல் வெள்ளிக்கிழமை! அம்மன் கோயில்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று தொடக்கம்
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப்படுவதால் அம்மன் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணமும் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்த அறிக்கை சட்டசபையில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவால் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 'ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு இவ்வாண்டு 2,000 பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்' என அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்திடும் வகையில் இந்தாண்டு சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத ஆன்மிக பயணம் 5 பயண திட்டங்களாக வரும் ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. ஆன்மிக பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் (பான்) நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in http://www.hrce.tn.gov.in > என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஜூலை மாதம் 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆடி மாத ஆன்மிக பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடி மாதத்தில் மூத்த குடிமக்களை அம்மன் கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் கட்டணமில்லா பேருந்து சேவை இன்று தொடங்குகிறது. சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து இந்த சேவை தொடங்குகிறது.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இன்று அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலையிலேயே திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், மயிலாப்பூர் முண்டககன்னியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று அம்பாளை எப்படி வழிபடுவது என்பதை பார்க்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். பிறகு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும்.
கலசம் வைக்கும் பழக்கம் இருப்போர் பித்தளை சொம்பில் மஞ்சளால் தோய்த்த நூலை சுற்றி குங்குமம் வைத்து பூக்களை வைக்க வேண்டும். அந்த நீர் நிரம்பிய கலச நீரில் அம்பிகை எழுந்தருளுவார் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications