தமிழகத்தில் தனிக்கோயில்! குலசேகரன்பட்டினத்தில் காரைக்கால் அம்மையாருக்கு நாளை மறுநாள் குருபூஜை!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ் நாட்டில் காரைக்கால் அம்மையாருக்கென்று தனிக் கோயில் அமைந்துள்ள இடம் குலசேகரன் பட்டினத்தில் மட்டுமே உள்ளது. காரைக்காலம்மையார் சிவனிடம் வேண்டி பேயுருவம் பெற்ற இடம் இதுதான் இந்த குலசேகரன்பட்டினம் ஆகும்.

பேயுருவம் பெற்று அற்புதத் திருவந்தாதி என்ற 108 பாடல் பாடிய பாடல் பெற்ற தலம். (11ம் திருமுறை). உன் அடியில் இருக்க வேண்டும் என்ற அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க கையில் தாளதுடன் பாடும் கோலத்துடன் நடராஜப் பெருமானின் கீழ் அமர்ந்துள்ள திருமேனியுடன் சிறிய கோயில் ஒன்று அமைந்துள்ளது.
அம்மையாரின் திருப்பாதம் பெற்ற இடங்கள் நான்கு மட்டுமே. காரைக்கால், குலசேகரன்பட்டினம், கைலாயம் மற்றும் திருவாலங்காடு. அம்மையாரின் பங்குனி சுவாதி குரு பூஜை வரும் பங்குனி 15 (28..3..24)
வியாழக்கிழமை நடைபெறுகிறது.

காலையில் 9..30 மணி அளவில் தேனி சக்திவேல் என்ற அன்பரின் ஆதரவோடு தமிழ்நாட்டின் தலை சிறந்த ஓதுவார் மூர்த்திகள், இணை வாத்தியங்களோடு பண்ணிசைத் திருமுறை இசைக்கப்படும். தொடர்ந்து 11..00 மணி அளவில் நெல்லை காரைக்கால் அம்மையார் வழிபாட்டுக் குழுவினர் முத்துக் குமாரசாமி தலைமையில் அம்மையாரின் பாடல்களையும் பெரிய புராண வரலாற்றுப் பாடல்களையும் பாராயணம் செய்வார்கள்.
அடியார் பெருமக்கள் அனைவரும் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என காரைக்கால் அம்மையார் கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். ஈசனால் அம்மையே என அழைக்கப்பட்டவர். 63 நாயன்மார்களில் முக்கியமானவரும் காரைக்கால் அம்மையார்தான். நாயன்மார்கள் அனைவரும் நின்றிருக்க காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்திருப்பார். இதற்கு காரணம் ஈசனே அம்மையே என அழைத்ததால்தான்! ஈசன் மீது பற்றுக் கொண்டவர் காரைக்கால் அம்மையார்.












Click it and Unblock the Notifications