Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருவார பிரதோஷம்..கிருத்திகை..சிவனை மட்டுமல்ல முருகனையும் வணங்கினால் என்னென்ன நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு வாரம் எனப்படும் இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதோஷமும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவது சிறப்பு. சிவபெருமான் குரு தட்சிணாமூர்த்தியாக திகழ்கிறார். முருகப்பெருமானோ, அப்பனுக்கே பாடம் சொன்னவனாக, ஞானகுருவாகத் திகழ்கிறான் என்கிறது கந்தபுராணம். சிவ ஆலயம் சென்று சிவனையும், முருகப்பெருமானையும் இன்று வணங்கினால் நல்ல வேலையும் மன நிம்மதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ, அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை வழிபடுவது நட்சத்திரப் பிரதோஷம் ஆகும். இந்த நாளில் மாலை வேளையான பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து வழிபடுவதற்கு தீபப் பிரதோஷம் என்று பெயர். இந்த பிரதோஷ வழிபாட்டை செய்வதன் மூலம் சொந்த வீடு அமையும்.

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13வது திதியாக வரும் திரயோதசி திதியே 'மாதப் பிரதோஷம்' ஆகும். இந்தத் திதியின் போது மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

 Guruvara Pradosham: What are the benefits of worshiping not only Lord Shiva but also Lord Murugan

அமாவாசைக்குப் பிறகான, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது திரயோதசி திதி. இந்தத் திதியே 'பட்சப் பிரதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம்) செய்வது நல்லது. அதாவது மயிலாப்பூர், மயிலாடுதுறை ஆகிய திருத்தலங்களில் உள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும்.

ஈசன் ஆலகால விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்த பிரதோஷம் மகா பிரதோஷம் எனப்படுகிறது. அன்றைய தினம் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது சிறப்பு.

வானத்தில் வ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டம், சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதி யில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதற்கு அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம் என்று பெயர்.

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ் வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வ ஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங் களின் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறப்பும், கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத் துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிடைக்கும்.

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை, ஏகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாட்களில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். மேலும் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால், அது திரிகரண பிரதோஷம் எனப்படும். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமி களுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அதற்கு பிரம்மப் பிரதோஷம் என்று பெயர். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம். வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம் ஆகும். தாருகா வனத்து ரிஷிகள் நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை அஷ்டதிக் பிரதோஷம் என்கிறார்கள். இந்த எட்டு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நமக்கு நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும். இது அரிதிலும் அரிதான பிரதோஷ வழிபாடு இதுவாகும். ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவதைத் தான் துத்தப் பிரதோஷம் இந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் எனப்படுகிறது. வியாழக்கிழமை குருபகவானுக்கு எற்ற நாள். இந்த நாளில் கார்த்திகை நட்சத்திரமும் சிறப்பு. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். குருவார பிரதோஷத்தில் மறக்காமல் தரிசனம் செய்யுங்கள்.

குரு வாரம் எனப்படும் இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதோஷமும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவது சிறப்பு.சிவபெருமானையும் குரு அம்சமாகச் சொல்கிறது புராணம். மைந்தன் முருகப்பெருமானும் குரு அம்சமாக, அப்பனுக்கே பாடம் சொன்னவனாக, ஞானகுருவாகத் திகழ்கிறான் என்கிறது கந்தபுராணம். எனவே, குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷம் என்பதால் சிவபெருமானையும் கிருத்திகை என்பதால், முருகக் கடவுளையும் வழிபடுவோம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+