ஸ்ரீ ரங்கம் ரங்கநாதருக்கு ஜூலை 2ல் ஜேஷ்டாபிஷேகம்.. 2 நாட்களுக்கு மூலஸ்தான சேவை இல்லை
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அவரது திருமுகத்தை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு வரும் ஞாயிறு திங்கட்கிழமைகளில் பொதுமக்களுக்கு மூலஸ்தான சேவை கிடையாது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீரங்கநாயகி தாயாரையும் தரிசனம் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலவர் ரங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இதனால், மூலவர் ரங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கநாதரின் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர். இவ்வாறு தைலக்காப்பிடும் நாட்களில் பெருமாளை அலங்கரித்திருக்கும் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு திருவடி தொடங்கி திருமுடிவரை தைலம் பூசப்படும். தைலம் பூசுவதற்காக பெருமாளின் மீதிருக்கும் வஸ்திரம் மற்றும் நகைகள் அகற்றப்பட்டுவிடுவதால் பெருமாளின் மார்புக்குக் கீழே திருவடி வரையுள்ள உள்ள பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும். ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும். மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது என்பதால் உற்சவர் நம்பெருமாளுக்கு ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வரும் ஞாயிறு ஜூலை 2ஆம் தேதியும் 3ஆம் தேதி திங்கள் மாலை 4.00 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17ஆம் தேதி ஜூலை 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது.
மறுநாள் ஆனி மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 4.30மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று பக்தர்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்தான் ஆனி கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் ஆனி கேட்டையில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். ஜேஷ்டாபிஷேக நாளில் காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனித நீர் எடுக்கப்படும். அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனித நீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக் குடங்களைத் தோளில் சுமந்தும் புனித நீர் ஊர்வலமாக அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாள் காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications