கஷ்டங்களை போக்கும் கந்த சஷ்டி .. திருச்செந்தூரில் நவ. 18ல் சூரசம்ஹாரம்.. தூத்துக்குடிக்கு விடுமுறை
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கந்த சஷ்டி: ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் நாள் சஷ்டி திதி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அடுத்த நாள் 13ஆம் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. சஷ்டி விழா தொடங்கியதும், 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள்.

கந்த சஷ்டி விரதம்: 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று நம் வீட்டு பெரியவர்கள் பழமொழி கூறுவார்கள். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கின்றனர். ஐப்பசி மாதம் வளர்பிறையில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த விழா திருச்செந்தூரில் கொண்டாடப்படுகிறது.
கடன் தொல்லை தீரும்: தமிழ் கடவுள் முருகனுக்கு உரிய விரதங்கள் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். இந்த விரதங்களில் முதன்மையானது கந்த சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும் திருமண பாக்கியம் கைகூடும்.
பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சஷ்டி விரதம்: கந்தன் நம் கவலைகளை தீர்ப்பவன். கந்தனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகள் பறந்தோடும். சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் செய்ய வேண்டும்.
கந்தனை நினைத்து விரதம்: காலையிலிருந்து சாப்பிடலாமல் பூஜையறையில் சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம். இந்த விரதம் இருப்பவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது. நல்லதை நினைத்து நல்லதையே பேச வேண்டும்.
நோய்கள் நீங்கும்: சஷ்டி விரதம் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும்: இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் குழந்தை வரம் கிடைக்கும். இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும்.
செல்வ வளம் பெருகும்: உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. கந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் கவலைகள் தீரும். சஷ்டி விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.
திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானது. இங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications