கந்த சஷ்டி விரதம்.. திருமண வரம்.. குழந்தை பாக்கிய வரம் தரும் சஷ்டி விரதம்.. எப்படி இருப்பது?
சென்னை: கந்த சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடைகள் நீங்கும் குழந்தை பாக்கிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள் தொல்லை ஒழியவும், நோய், கடன் பிரச்சினை தீரவும் சஷ்டி விரதம் இருந்தால் கை மேல் பலன் கிடைக்கும். கந்த சஷ்டி விரதம் எப்படி இருப்பது என்று பார்க்கலாம்.
முருகனுக்கு உகந்த சஷ்டி: சஷ்டி என்பது ஆறாவது திதி. வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என முருக பக்தர்கள் சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வணங்குகின்றனர். வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள். கார்த்திகை, பூசம், விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள். திதிகளில் சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது.

சஷ்டி விரதம் புராண கதை: சஷ்டி விரதம் கவலைகளை நீக்கி சந்தோஷத்தை தரக்கூடியது. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது சஷ்டி திதியை வைத்து உருவான பழமொழி. சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை பேறு கிடைக்கும் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளனர். இதற்கான புராண கதையும் ஒன்று உள்ளது.
சித்தர் சொன்ன சூட்சுமம்: நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை. ஒருநாள் சித்தர் ஒருவர் கோயிலுக்கு வந்தார். அந்தப் பெண் அவரிடம் தன் குறையைச் சொன்னாள். "குடம் பிடித்தான், சட்டி கொள்!'' என்றார் சித்தர். சித்தர்கள் சூட்சுமமாகப் பேசுவார்கள். அப்பெண் படிப்பறிவில்லாதவள். குடம் பிடித்தானையும், சட்டி கொள்வானையும் எங்கு போய்க்காண்பாள்? சித்தர் சொன்னதன் பொருள் அவளுக்கு புரியவில்லை. குழம்பித் தவித்தாள்.
அழகன் முருகன்: மாம்பழக் கவிராயர் என்ற புலவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்பெண் அவரிடம் சென்று, ஐயா, குடம் பிடித்தான், சட்டி கொள் என்று ஒரு சித்தர் சொன்னார். அதன் பொருள் என்ன?'' என்று கேட்டாள். அதற்குப் புலவர், குடம் என்பதைக் குக்குடம் என்று பொருள் கொள்ள வேண்டும். குக்குடம் என்றால் சேவல் என்று பெயர். அந்தச் சேவலைக் கொடியில் வைத்திருப்பவன் சேவற்கொடியோன். அவன் யாரென்று உனக்குத் தெரியுமா, அம்மா?'' என்று கேட்டார்."தெரியும் ஐயா. அவர்தான் முருகக்கடவுள் என்றார் அந்த பெண்.
குழந்தை வரம் கொடுத்த முருகன்: சட்டி என்பது "கந்த சஷ்டி' என்று பொருள். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பதையே அந்தச் சித்தர் சொல்லியிருக்கிறார். அப்படியே செய்து வா!'' என்றார் புலவர். அப்பெண் "அப்படியே செய்கிறேன்' என்று கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றாள். ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருந்ததன் பலனாக அழகன் முருகனைப் போலவே ஆண் மகனைப் பெற்றெடுத்தாள் அந்த பெண்.
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி: கந்த சஷ்டி விரதம் இன்று முதல் முருகன் ஆலயங்களில் தொடங்கியுள்ளது. விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆறு நாட்களும் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டுமே குடிக்க முடியாதவர்கள் பழங்களை சாப்பிடுவார்கள். சிலரோ ஒரு பொழுது சாப்பிடுவார்கள்.
கை மேல் பலன்: காய்ச்சாத பால், அவல் சாப்பிடுவார்கள். வேக வைக்காத காய்கறிகள் பழங்கள் சாப்பிடுவார்கள். காலை மாலை என இரண்டு வேளையும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். பெரும்பாலானோர் கோவிலுக்கு போய் சஷ்டி விரதம் இருப்பார்கள். சிலர் தங்களின் வீடுகளில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்குவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அழகன் முருகனை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் அதற்கான நற் பலன்கள் கிடைக்கும். நம்பிக்கையோடு இருந்தால் நல்லவையே நடக்கும்.












Click it and Unblock the Notifications