சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! பிள்ளை வரம் தரும் சஷ்டி விழா! இன்று விரதம் இருங்கள்
சென்னை: தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த சஷ்டி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஸ்கந்தா, கார்த்திகேயன், சுப்பிரமணியன் என அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்தது.
வளர்பிறை சஷ்டி விழா இன்று தொடங்கி நாளை இரவு 7.16 மணிக்கு முடிவடைகிறது.

கந்தனாகவும், கார்த்திக்கேயனாகவும், சுப்ரமணியராகவும் முருகன் குன்று இருக்கும் இடமெங்கும் குமரனாக போற்றப்படுகிறார். முருகன் என்றால் அழகு என்று அர்த்தம். இவர் தமிழர்களின் கடவுள் மட்டுமல்ல இரண்டாம் தமிழ் சங்கத்தின் தலைவராகவும் போற்றப்படுகிறார். அகத்தியருக்கே தமிழ் கற்றுக்கொடுத்தவராம் இந்த அப்பனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சுப்பன். முருகனும் தமிழும் ஒன்றுதான் என்பதை இவரை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
முருகனின் அவதார நோக்கமே சூரபத்மன் அவரது சகோதரர்களை அழிப்பதுதான். அதற்காகவே சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான அக்னியில் உதித்தவர். ஆறு அக்னி குஞ்சுகளை சரவணப்பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் கங்கை அன்னை கொண்டு போய் சேர்க்க அவை ஆறு குழந்தைகளாக உருமாறின. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டான் கார்த்திக்கேயன். ஆறுமுகமாக இருந்த கந்தன் அன்னை பார்வதியின் கரம் பட்டு ஒருமுகமாக அழகான முருகனாக உருமாறி சக்தி மைந்தனாக மாறினார்.
மாதந்தோறும் சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் திருச்செந்தூரில் பக்தர்கள் அதிகம் பேர் கூடி முருகனை வழிபடுவர். சஷ்டி விரதம் இருந்தால் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று நம் வீட்டு பெரியவர்கள் பழமொழி கூறுவார்கள். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கின்றனர்.
எனவே சஷ்டி நாளில் குழந்தை பேறு, திருமண தடை நீங்க, திருமணம் கைகூடும், கல்வி மேலோங்கும், செல்வம் வளரும். சஷ்டி விரதமிருக்க வீட்டை சுத்தம் செய்து செம்மண் கோலமிட்டு, முருகனை வழிபட வேண்டும். அன்றைய தினம் பழங்கள், வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்து நெய்யால் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
முருகனின் நாமங்களை சொல்லியும் கந்த சஷ்டி கவசத்தை பாடியும் இருக்க வேண்டும். அருகில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடலாம். இந்த சஷ்டி விழா தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications