நோய் நீக்கும் மரியாயி.. காளையார் கோவிலில் மருது பாண்டியர்கள் கட்டிய கல்லறை கோவிலில் கறி விருந்து
சிவகங்கை: காளையார் கோவில் அருகே மருதுபாண்டியர்கள் கட்டிக்கொடுத்த புனித மரியாயி கல்லறை கோவில் இன்றைக்கும் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் ஆலயமாக உள்ளது. புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு புனித மரியாயி கல்லறை கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கறி விருந்தும் அன்னதானமாக வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பருத்தி கண்மாயில் அமைந்துள்ளது புனித மரியாயி கல்லறை கோவில். 200 ஆண்டுகளுக்கு முன்னர் மரியாயி என்ற இளம் பெண் காளையார்கோயில் பகுதியில் தனது இறை அருளால் ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பின்னர் அவரது சேவையை போற்றும் விதமாக சின்ன மருது பெரிய மருது சகோதரர்கள் கல்லறையை கட்டி இடமும் வழங்கி மக்கள் வழிபட ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து சிவகங்கை மாவட்ட மக்களும், காளையார்கோவில் சுற்றுவட்டார கிராமமக்களும் சிறு ஆலயம் கட்டி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சிறப்பு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் மாரியாயி கல்லறை கோயிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இங்கு வந்து பிராத்தனை செய்யவர்களுக்கு நீண்ட நாள் தீராத நோய்களும், பிரிந்து போன உறவும், தொலைந்து போன செல்வங்களும், சுப காரியங்களும் கைகூடுவதாக நம்பிக்கை. இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்களும் புதிய வேண்டுதல் வைப்பவர்களுக்கு இவ்விழாவில் கலந்து கொண்டு கிடா வெட்டி அன்னதானம் நடத்துவது வழக்கம்.
இந்தாண்டு மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சிக்காக 33 ஆடுகளை வெட்டி உணவு சமைக்கப்பட்டது. கறி விருந்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து அனைத்து சமூக மக்களும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கோவிலுக்கு வந்து வேண்டுதல் வைத்துவிட்டு சென்றால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறுகின்றனர். மரியாயி கல்லறை கோவிலுக்கு வந்து வழிபடும் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர், காளையார் கோவில் புனித மரியாயி கல்லறை கோவில் என் மனதிற்கு நெருக்கமானது. இதனால் ஆண்டுதோறும் புராட்டாசி திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்துவிடுவோம் என்று கூறினார். இந்தாண்டு கோயிலில் 33 ஆடுகள் வெட்டப்பட்டு அனைவருக்கும் கறி விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். எனக்கு என் குடும்பத்துடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.
மருது சகோதரர்கள் எத்தனையோ இந்து ஆலயங்களை கட்டி முடிக்க உதவி செய்துள்ளனர். அதே போல சருகணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தைத் திறம்பட நடத்துவதற்காக அச்சிற்றூரை மருது சகோதரர்கள் முழுமையாக அக்கோவிலுக்கு தானமாக வழங்கினர். அங்கு நடைபெறும் தேரோட்டத்துக்குரிய செலவுகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போதும் திருவிழாக் காலங்களில் மருது சகோதரர்களின் குடிவழியினருக்கு முதல் மரியாதை அளித்த பின்னரே தேரோட்டம் நடைபெறுகிறது. அது போலவே மரியாயி கல்லறை கோவிலும் சிறப்பு வாய்ந்த கோவிலாக அனைத்து சமுதாய மக்களும் வந்து வழிபட்டு செல்லும் ஆலயமாக திகழ்கிறது.












Click it and Unblock the Notifications