Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலசேகரப்பட்டிணம் தசரா கோலாகலம்.. மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் முத்தாரம்மன்.. குவிந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா களைகட்டியுள்ளது. காளி வேடம் அணிந்த ஏராளமான பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடியது காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு கடற்கரையில் நடைபெறுவதைக் காண லட்சக்கணக்கானோர் குலசையில் குவிந்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்மாள் பல்வேறு அவதார கோலத்தில் எழுந்திருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

Kulasai Dasara festival: Victory of good over evil Today Mahisasoora Samharam

முத்தாரம்மன் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் கருணை உள்ளம் கொண்டவள். இந்த அம்மனை வணங்கி சரணடைந்தால் போதும் நம்முடைய பிரச்சினைகள் அத்தனையும் காணாமல் போய்விடும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு.
குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள். சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை முத்தாரம்மனுக்கு பிடித்தது.

இங்கு செவ்வாய்க் கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது. அம்மை போட் டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும். அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விரதம் இருக்கும் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும்.

அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மனை நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நினைத்த காரியங்கள் நினைத்தப்படி நடக்கும். தீராத நோய்கள் தீரும். மனநோய், தொழுநோய், தீராத வயிறு வலியும் தீரும். குலசை முத்தாரம்மனிடம் உங்களையே ஒப்படைத்து சரணடைந்தால் அந்த அம்மன் பார்த்துக்கொள்வாள். முத்தாரம்மனின் கருணை பார்வையினாலே அனைத்து சிக்கல்களும் குணமாகும்.

முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள். முத்தாரம்மனுக்கு காளி வேடம் போட்டு பலரும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து, புடவை எடுத்து கொடுப்பதும் நேர்த்திக்கடன்தான்.

விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள்.

மகிஷாசூரன், சிம்மத் தலை, எருமைத் தலை என பல வடிவங்களில் வந்தபோதும், அம்பிகையின் திரிசூலம் அவற்றை கொய்து வதம் செய்து விடும். தீமையை அழித்து, நன்மையை அம்பிகை நிலைநாட்டுவதான் இதன் முக்கியத்தும். அசுரவதம் முடிந்த உடன் பக்தர்கள் "ஓம் காளி.. ஜெய் காளி.." என ஆங்கார முழக்கமிடுகின்றனர். சில பக்தர்கள் ஆவேசமாக அருள் வந்து ஆடுவார்கள். காளிவேஷம் போட்ட பக்தர்களின் ஆட்டம் கடும் ஆங்காரமாக இருக்கும்.

பக்தர்களின் மகிழ்ச்சியை உணர்த்தும் வகையில், வான வேடிக்கைகளும் நடக்கும். பல வகை மேளங்களும், வாத்தியங்களும் வாசிக்கப்படும். மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்ததும், அம்பிகையை சாந்தப்படுத்த, அவளுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, போர்க்கோல கோபம் நீங்கிய அம்பிகை, தாய்க்கோலம் கொண்டு, பக்தர்களை கருணையோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள் அன்னை.
மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12ஆம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+