குலுங்கியது குலசை.. மக்கள் வெள்ளத்தில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்! காணக் கண்கோடி வேண்டும்!
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 10ஆம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. ட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்தார். இதனையடுத்து 11வது நாளான இன்று பக்தர்கள் விரதத்தை முடித்து காப்பு களைகின்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

ஞானமூர்த்தீஸ்வரர் உடனரை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என பக்தர்கள் நம்பி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முத்தாரம்மன் ஆலயத்தில் புகழ்பெற்ற தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்படும் கொண்டாடப்படுகிறது.
மைசூர் தசரா விழாவுக்கு பிறகு குலசேகரப்பட்டணம் தசரா விழா என்றால் அது உலகப் புகழ்பெற்றது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து காப்பு கட்டி தசரா விழாவில் பங்கேற்ற பக்தர்கள் நேர்த்திக் கடனாக அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெற்றனர். தொடர்ந்து காணிக்கையை அம்மனுக்கு செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிலையில் குலசை தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சூரசம்காரம் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெற்றது. மகிஷாசூரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருந்த சிதம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து அங்கு மகிஷாசுர வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் எருமைத் தலையினை கொய்து அம்மன் வெற்றி கொடியை நாட்டினார்.
தீமையை அழித்து நன்மையை அம்மன் நிலை நாட்டுவதை குறிக்கும் வகையில் நடைபெற்ற சம்காரத்திற்கு பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குலசையில் இருப்பது மனித தலையா? கடல் அலையா? என்பது போல எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே இருந்தது.
தொடர்ந்து சூரசம்காரத்தை தரிசித்து விட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் மனதார தரிசித்து புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து விழாவில் பதினோராவது நாளான இன்று பக்தர்கள் தங்கள் காப்புகளை அகற்றி விரதத்தை நிறைவு செய்ய உள்ளனர். விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் விழா இனிதாக நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications