Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மையே அமர்க.. சிவன் சொன்ன சொல்.. குலசேகரப்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் பேயுருவம் பெற்ற அன்னையை வணங்கும் வகையில் இன்றைக்கு மாங்கனி திருவிழா கோலகலமாக நடைபெற்றது. கணவன் விரும்பாத என் அழகுத் திரு மேனியை அழித்து பேயுருவம் தாருங்கள்!'' என்று ஈசனை வேண்டவே, புனிதவதியின் அழகு அழிந்து, எலும்புக்கூடாக உடல் மாறியது. குலசேகரபட்டினத்தில் இது நிகழ்ந்தது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

காரைக்கால் அம்மையார்: 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.

kulasekara pattinam mangani thiruvizha 2023 Karaikal Ammaiyar Story

ஆனி பவுர்ணமி: மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை மாற்றியது இரண்டு மாம்பழங்கள்தான். எனவேதான் இன்றைய மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இரண்டு மாம்பழங்களை படைத்து வழிபட்டு ஒன்றை பிரசாதமாக பெற்றுச் சென்றனர்.

குலசேகரப்பட்டினம்: குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பு பெற்ற இடம். இந்த ஊரில் மாங்கனி திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் இங்கு மாங்கனித்திருவிழா நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, பேய்க்கோலம் பூண்டார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார், சித்தமெல்லாம் சிவமயமாக திகழந்தார். அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். அந்த தலம் இன்றைக்கும் குலசேகரபட்டினத்தில் உள்ளது.

தெய்வீகப்பெண்: புனிதவதியாக பிறந்து இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, இவரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு விலகி சென்று விடுகிறார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் குலசேகரபட்டினத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் பிறக்க புனிதவதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தார். பரமதத்தர் குலசேகபட்டினத்தில் இருப்பது அறிந்த புனிதவதியின் காரைக்காலில் இருந்து ஓடோடு வந்தார். புனிதவதியை எதிர்கொண்டு அழைத்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர். அவர்களிடம், ''புனிதவதி மனிதப் பிறவி அல்ல; தெய்வம். நீங்களும் வீழ்ந்து வணங்குங்கள்!'' என்றார். அவரின் கருத்தறிந்த புனிதவதியார் கலங்கவில்லை.

பேயுருவம்: கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகு, தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.

அம்மையே என்று அழைத்த இறைவன்: பனி மலையில் இறைவன் வசிக்கும் இடத்தை காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து செல்ல, அதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் 'வாரும் என் அம்மையே' என அழைத்தார். யாது வேண்டும் என்று சிவன் கேட்க அதற்கு அம்மையோ, 'பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும். மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா! நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும்' என்று வேண்டினார். உடனே ஈசன், திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி அருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம் பெற வைப்பது சிற்ப மரபாகியது.

மாங்கனி பிரசாதம்: ஆனி பவுர்ணமி நாளில் காரைக்காலில் மட்டுமல்ல, குலசேகரபட்டினத்திலும் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இன்று மாலை காரைக்கால் அம்மையாருக்கு 2000 மாங்கனிகளை படையலிட்டு வணங்கி, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாங்கனி திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம்வளர்த்த அம்பிகை சமேத காஞ்சி விஜய கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் வைத்து அம்மையார் பாடிய பதிகங்களும் அம்மையார் பெரிய புராண வரலாறும் திருநெல்வேலி திருவுருமா மலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவினரால் திருமுறை ஆசிரியர் திரு. வள்ளிநாயகம் ஐய்யா அவர்கள் தலைமையில் இறைவனுக்கு திருமுறை விண்ணப்பம் செய்யப் பட்டது. நிகழ்ச்சியில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, குலசை அடியார்களும் உலக சிவனடியார்கள் கூட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திருச்செந்தூர் செல்பவர்கள் குலசேகரபட்டினம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்ற தலம் அமைந்துள்ளது. வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இல்லங்குடி என்பவர் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகிறார். திருச்செந்தூர் செல்பவர்கள் குலசை சென்று காரைக்கால் அம்மையாரையும் தரிசனம் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+