நாளை மகா சிவராத்திரி! அதென்ன 4 கால பூஜை? எந்த காலத்திற்கு என்ன அபிஷேகம் செய்யலாம்?
சென்னை: மகா சிவராத்திரி தினமான நாளை பிப்ரவரி 26ஆம் தேதி எந்த மாதிரியான வழிபாட்டை நடத்தலாம், என்னென்ன அபிஷேகம் செய்யலாம். எந்த உணவை நெய்வேத்தியமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறுகையில், மாசி மாதத்தில் முக்கிய விரதமான மகா சிவராத்திரியை பற்றி பார்க்கலாம். இந்த விரதத்தின் சிறப்புகள் குறித்தும் பார்க்கலாம்.

இந்த சிவராத்திரி என்பது விரத நாள் மட்டுமில்லாமல், ஒரு கொண்டாட்ட நாள் என சொல்லலாம். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதம் சதுர்தசி அன்று கொண்டாடக் கூடியதுதான் இந்த மகா சிவராத்திரி.
மகா சிவராத்திரிக்கு முந்தைய நாள் பிப். 25 ஆம் தேதி பிரதோஷமாகும். அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 26ஆம் தேதிதான் மகா சிவராத்திரி நாளாகும். இந்த விரதம் எப்படி இருக்க வேண்டும். இந்த விரதத்தினால் என்னென்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.
இன்றைய தினம் பிரதோஷம் என்பது தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிரதோஷம் ஆகும். மாதந்தோறும் கொண்டாடக் கூடிய ஒரு விரத நாளாகவும் இது அமைந்திருக்கிறது. எனவே பிரதோஷ விரதம் இருப்பவர்கள், காலையில் விரதத்தை தொடங்கி, மாலை பிரதோஷத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இன்று மாலை உணவு எடுத்துக் கொள்ளலாம்.
26ஆம் தேதி நாளை காலை முதல் இந்த சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். சிவராத்திரியில் முக்கியமானது மவுன விரதம். இதை காலை எழுந்தது முதலே இருக்க வேண்டும். விரதம் இருப்போர் நாளை காலை முதலே பட்டினி உபவாசத்தை ஆரம்பித்து விடலாம்.
நாளை காலை குளித்துவிட்டு சிவபெருமானுக்கான பதிகங்கள், ஸ்தோத்திரங்களை சொல்லலாம். சிவராத்திரிக்கு தண்ணீர் குடிக்காமல் இருந்து விடாதீர்கள். தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். அதில் எந்த தவறும் தோஷமும் இல்லை.
நீர், இளநீர், ஜூஸ், பால் உள்ளிட்ட எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவனின் படம் முன்போ அல்லது சிவலிங்கம் முன்போ அமர்ந்து பூஜை செய்யலாம்.
லிங்கம் வைத்திருப்போர், அபிஷேகம் செய்யக் கூடிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரியில் 4 காலங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. சிவராத்திரியில் முதல் காலம் இரவு 7.30 மணிக்கு, இரண்டாம் காலமாக இரவு 10.30 மணிக்கு, 3ஆவது காலம் நள்ளிரவு 12 மணிக்கும், 4ஆம் காலம் அதிகாலை 4.30 மணிக்கும் ஆரம்பிக்கிறது.
இந்த 4 கால பூஜை என்பது கோயிலுக்கு கோயில் மாறுபடும். முதல் கால பூஜையின் போது சிவனுக்கு உகந்த வில்வ இலைகள், அர்ச்சிப்பதற்கான மலர்களை தயார் நிலையில் வைத்திருங்கள். கோயில்களில் நம் கைகளால் பூஜை செய்ய முடியாவிட்டால் வீட்டில் இருக்கும் சிவனுக்கு ஒரு வில்வ இலையை வைத்து ஓம் சிவாய நம என சொன்னால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
4 காலங்களிலும் என்ன அபிஷேகம் செய்யலாம்
அபிஷேகம் என்பது படங்களுக்கு செய்ய முடியாது என்பதால் படம் வைத்திருப்போர் நெய்வேத்தியமாக செய்துக் கொள்ளலாம். சிவராத்திரியின் முதல் காலம் பிரம்ம தேவர் பூஜித்த காலம் என்பதாகும். இந்த நேரத்தில் சிவனுக்கு பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பாசி பருப்பு கலந்த சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம் செய்யலாம்.
இரண்டாம் காலம் மகாவிஷ்ணு வழிபாட்டு காலம் என்பதாகும். பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம். இனிப்பு பாயாசம், கற்கண்டு பொங்கலை வைத்து நெய்வேத்தியம் செய்யலாம்.
மூன்றாவது காலம் அம்பாள் வழிபட்ட காலம் எனலாம். இந்த மூன்றாவது காலம்தான் சிவராத்திரியில் மிக முக்கியமான காலமாகும். இந்த காலத்தில் தேனால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து ஒரு வில்வ இலையை வைத்து அர்ச்சனை செய்து எள்ளு சாதத்தை நெய்வேத்தியம் செய்யலாம்.
4ஆவது காலம் என்பது தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் என அத்தனை ஜீவராசிகளும் சிவனை வழிபட்ட காலம் ஆகும். அப்போது கரும்பு சாற்றில் அபிஷேகம் செய்யலாம். கரும்பு கிடைக்காவிட்டால் பாலால் அபிஷேகம் செய்யலாம். வெள்ளை சாதத்தில் நெய் விட்டு சுவாமி நெய்வேத்தியம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications