Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசி அமாவாசை.. கையெடுத்து கும்பிட்டால்..கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குல தெய்வம்..வம்சம் தலைக்கும்

தமிழ்நாட்டில் மகாசிவராத்திரி மாசி அமாவாசை நாளில் பங்காளிகள், சொந்த பந்தங்கள் புடைசூழ குல தெய்வத்தை கும்பிட்டு வம்சம் செழிக்க வேண்டிக்கொள்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் குல தெய்வத்தை வழிபட்டு வம்சம் தழைக்கவும் கஷ்டங்கள் நீங்கவும் வேண்டிக்கொண்டனர். மாசி அமாவாசை நாளிலும் ஏராளமானோர் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். சோமாவதி அமாவாசை தினமான இன்று குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் தடைகள் நீங்கி சுப காரியங்களில் வெற்றி உண்டாகும்.

 Mahashivarathiri: Masi Amavasai Somavathi Amavasai prayer for Kuladeivam

திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். இந்த நன்னாளில் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் பிரம்ம-விஷ்ணு-சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும். ஆகவே இந்த புண்ணிய தினத்தில் காலையில் குளித்து முடித்து வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.

குல தெய்வம் நம் குலத்தினை காக்கின்ற தெய்வம். குல தெய்வ வழிபாடானது தொன்று தொட்டு தமிழ்நாட்டில் முறையாக பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது. குலம் தெரியாமல் போனாலும் குல தெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக் கூடாது என்று குல தெய்வம் பற்றி கூறுகின்றனர். குலதெய்வத்தை மறந்து விட்டால் குல தெய்வத்தின் அருள் கிடைக்காவிட்டால் எந்த நல்ல காரியமும் நடைபெறாது. நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக வந்து குல தெய்வத்தை கும்பிட்டுள்ளனர்.

முருகன், விநாயகர், சிவன், பார்வதி, பெருமாள் என எத்தனையோ கடவுள்களை வணங்கினாலும் நல்ல காரியம் செய்யும் முன்பாக நம் குல தெய்வமான உப்பட்டம்மன், காமாட்சியம்மன், சவுண்டம்மன், கருப்பசாமி, இசக்கி, பேச்சியம்மன் என குலம் காக்க நிற்கும் தெய்வங்களை மனதால் நினைத்து கும்பிட்டு விட்டு சென்றால் நாம் நினைத்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும். பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கல், பெட்டி போன்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. சிலருக்கு மட்டுமே உருவ வழிபாடு செய்ய முடிகிறது. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.

நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது கும்பிட்டு வந்தால் நோய்கள் தீரும், கஷ்டங்கள் காணாமல் போகும். வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் நம்பியவர்க்கு தர்மராசா... நம்பாதவருக்கு எமராசா என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு குடுபத்தினருக்கும் ஒரு தெய்வம் குல தெய்வமாக இருக்கும். படிப்பு, தொழில் காரணமாக பல ஊர்களில் வசிக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து குழுவாக வழிபடும் விழாவாக குல தெய்வ வழிபாடு உள்ளது. மாசி மாதத்தில் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பகையை மறந்து ஒற்றுமையாக குலதெய்வத்தை வணங்குவார்கள். மாசி மகாசிவராத்திரி அன்றும் அடுத்த நாள்களிலும் குலதெய்வ வழிபாடு தமிழத்தில் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக வெளியூர்களில் நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் குலதெய்வத்தைக் காண வருவார்கள். அதே போல பங்குனி உத்திரம் தினத்தன்றும் தென் மாவட்டங்களில் குலதெய்வத்தை வணங்குகின்றனர்.

மனதில் நினைத்து கூப்பிடாமல் உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம் என்கின்ற கருத்தும் மக்களிடம் நிலவுகிறது. குல தெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. மேலும் குல தெய்வ சாபம் வம்சத்தை சீரழிக்கும் போன்றவற்றை மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

திருமணம், வீடு கட்டுதல் போன்ற விசேஷங்களின் போது முதலில் குல தெய்வத்தை வழிபட்ட பின் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் குல தெய்வக் கோயில்களிலே நடைபெறுகின்றன. திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் துவங்கும் விழா போன்றவற்றின் அழைப்பிதழ்களை குல தெய்வத்திடம் வைத்து முதலில் வழிபாடு நடத்திய பின்பே பின் எல்லோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படுகின்றன.

ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு செய்யவேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாப நிவர்த்தி செய்வது அவசியம்.

ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வத்தை குறிக்கக்கூடிய கிரகமாக விளங்குகிறார் சனி பகவான். அதன் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் இருக்கின்ற வீட்டில் இருந்து 6ம் வீட்டில் புதன், சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு குலதெய்வ சாபம் இருக்கிறது என்பதை எளிதாக அறியலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள். நம்முடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்திருந்தால் குலதெய்வ சாப பரிகாரம் என்பது மிக எளிதாக இருக்கும். நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி நாம் வணங்கவேண்டும். நமது தவறுக்காக குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டால் சாபம் தீரும்.

ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்னைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாத குற்றம் காரணமாக இருக்கும். அதேபோல கிரகங்களின் நல்ல பலன்களும் முழுமையாக ஒருவருக்கு பலன் தர வேண்டுமென்றால் குலதெய்வ அனுக்கிரகம் மிக முக்கியமாகத் தேவை. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ, திருமணம் தடை பட்டாலோ, புத்திய பாக்கியம் இல்லாமல் போனாலோ ஏதேனும் தீமைகள் ஏற்பட்டாலோ குல தெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.

ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது என்பதும் நம்பிக்கை.

குல தெய்வம் யார் எதுவென்று தெரியாதவர்கள் வியாழக்கிழமைகளில் குருஓரையில் காலபைரவரை வணங்கி குல தெய்வத்தை தெரிவிக்கும் படி வேண்டிக்கொள்ளலாம். அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.

அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும். சோமாவதி அமாவாசை தினமான இன்றைய தினம் குல தெய்வத்தின் பெருமையை நம் தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளையும் அழைத்துச்சென்று முன்னோர்களின் ஆசியை பெறுவோம். சுப காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+