திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 14: கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
திருப்பாவை - பாடல் 14
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: நாங்கள் எழுவதற்கு முன்னதாகவே வந்து எங்களை எல்லாம் எழுப்புவேன் என வீரவசனம் பேசினாயே, வாக்கை மறந்ததற்கு வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டு தோட்டத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள்.சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கைகளை கொண்டவனும் தாமரை போன்ற கண்களை கொண்டவனுமாகிய கண்ணனை பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: எப்போதுமே கொடுத்த வாக்கை தவறவிடவே கூடாது. வாக்கு கொடுப்பது சுலபம், ஆனால் அதை காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும். சொன்னதை செய்ய வேண்டும் என்பதைத்தான் இந்த பாடல் உணர்த்துகிறது.
திருவெம்பாவை பாடல் - 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: காதில் அணிந்துள்ள தோடு ஆடும்படியாகவும் உடம்பில் அணியப்பட்ட பொன்னாலாகிய அணிகள் ஆடவும், கூந்தல் மாலை ஆடவும், மாலையைச் சுற்றும் வண்டுக் கூட்டம் சுழலவும், குளிர்ந்த நீரில் மூழ்கி தில்லை சிற்றம்பலத்தசைப் புகழ்ந்து பாடி அவன் ஆதியான முறையையும் பாடி அந்தமான முறையையும் பாடி, உமாதேவியின் திருவடிச் சிறப்பை பாடி நீராடுவோம்.
விளக்கம்: குளிக்கும் போது இன்ப உணர்வுகளுக்கும் கீழ்த்தரமான எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது. இந்த சமயத்தில் நமசிவாய , சிவாயநம என்ற நாமங்களே சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications