திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 26: இறைவனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?
திருப்பாவை - பாடல் 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: பக்தர்களிடத்தில் அதிக அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தை உடையவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும் பால் சாதம் போன்ற நிறத்தையும் உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும் பெரிய முரசுகளையும் பல்லாண்டு பாடும் பெரியோரையும் மங்கள தீபங்களையும் கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
விளக்கம்: பாஞ்சஜன்யம் என்ற சங்கை பற்றி விவரிக்கிறது இந்த பாடல்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் - 6
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பாடல் பொருள்: பார்வதி தேவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளார்கள். எங்களுடைய இந்த பிறவியை நீக்கிவிட்டு எங்களுக்கு அருள் புரியும் எம்பெருமானே துயிலில் இருந்து எழுந்திருங்கள்.
விளக்கம்: பூஜை புனஸ்காரம் செய்தும் தங்களுக்கு துன்பம்தான் வருகிறதே என இறைவனை திட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் நீங்கள்தான் எங்களுக்கு என சரணாகதி அடைவோரும் இருக்கிறார்கள் என்பதை இந்த பாடல் விளக்குகிறது.












Click it and Unblock the Notifications