எங்க ஊரு ராணி மதுரை மீனாட்சிக்கு சொக்கரோட திருக்கல்யாணம் கோலாகலம்..திருத்தேரில் ஊர்கோலம்
மதுரை: பட்டத்தரசி மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரர் உடன் இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே திருக்கல்யாணத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண முருகனும் தெய்வானையும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்திருக்க கூடவே பவளக்கனிவாய் பெருமாளும் தாரை வார்த்துக்கொடுக்க வந்திருக்கிறார்.
மதுரையில சித்திரை திருவிழா கொடியேறுனதுல இருந்தே மாசி வீதியில கூட்டந்தான். இது சாமிக்கு நடக்கிற திருவிழா மட்டுமில்லை எங்க ஊரு ராணி தாயி மீனாட்சிக்கு நடக்குற திருவிழா. அதனாலதான் இத்தனை அலப்பறை. பார்க்கிற இடமெல்லாம் என் தாயி மீனாட்சியாகவும், கள்ளழகராகவும் வேஷம்போட்டு பிள்ளைகளை அழைச்சிட்டு வந்து சாமி பார்க்க கூடி நிற்பாங்க மதுரைக்காரங்க.

எல்லா ஊர்லயும் சாமிக்கு திருக்கல்யாணம் நடக்குறப்ப எங்க மதுரை ராணி மீனாட்சிக்கு சொக்கரோட திருக்கல்யாணம் நடக்குறதை பார்க்க ஊரே கூடி இன்னைக்கு இருக்கு. ஆடி வீதியே அமர்களப்படுது. வீதி எங்கும் பூக்களோட வாசனை ஆளை தூக்க அம்மை அப்பனுமாக கல்யாண கோலத்தில வந்து அமர்ந்திருந்தாங்க.
பட்டுசேலை சரசரக்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போற மாதிரி எல்லோரும் வந்திருக்காங்க. கையில ரெடியா மஞ்சள் சரடும் வச்சிருந்தாங்க. மீனாட்சி கழுத்துல மாங்கல்யம் ஏறின அடுத்த நொடி சுமங்கலி பெண்களும் தாலி மாத்திக்கிட்டு கண்ல ஒத்திக்கிட்டு கும்பிட்டுக்கிட்டாங்க.

பிள்ளையில்லாத பாண்டிய மன்னன் வரம் கேட்டு தவமிருக்க மகளா வந்து பிறந்தவ என் தாயி மீனாட்சி. இன்னைக்கும் எங்க ஊர்ல பொம்பள பிள்ளைங்க பிறந்தா அவங்க பேரு மீனாட்சி. ஆம்பளைக்கு ஆம்பளையா தைரியத்தோடு வளர்ந்த என் தாயி ஆட்சி பண்ண ஆரம்பிச்ச மாதம் சித்திரை.
வேப்பம்பூ மாலை சூடி..கையில செங்கோலை ஏந்தி வெள்ளி சிம்மாசனத்துல ஏறி அவ ஊர்வலம் வர்ற அழகை பார்க்க மாசி வீதியே நிறைஞ்சிருக்கும். மதுரையே அவளுக்கு கீழதான்றது இந்த திருவிழாதான் சாட்சி. அவ கண் அசைவை கட்டளையா ஏத்துக்குவாங்க.
இந்திர விமானத்தில ஏறி கடவுளையே போர்ல ஜெயிக்க போன மீனாட்சி கயிலாயத்துல சிவபெருமானை பார்த்து அழகுல மயங்கி அடுத்த நொடியே பெண்ணாக மாறி வெட்கத்தில முகம் சிவக்க நின்னதை சொல்ல வார்த்தை இல்லை. அதுக்கு அப்புறம் மதுரையோட மாப்பிள்ளையா மாறி ராணி மீனாட்சியை கரம் பிடிச்ச நாள்தான் இன்னைக்கும் சித்திரையில திருக்கல்யாணமாக கொண்டாடுறாங்க.

மதுரை சுத்துப்பட்டி ஜனங்களும் திருக்கல்யாணத்தை பார்க்க கூடியிருந்தாங்க.. நம்ம போக முடியலையேன்னு ஏங்கியிருக்கிற மக்களை பார்க்க நாளைக்கு புதுமாப்பிள்ளையும் பொண்ணாக திருத்தேரில ஏறி ஊர்வலமாக வருவாங்க. எல்லா நாளும் திருநாளா இருக்கக் கூடாதாங்கிற சந்தோஷத்தோட திருவிழா முடிவுக்கு வரும். அழகர் மலையில இருந்து கேட்கிற அதிர்வேட்டு சத்தத்தை கேட்டு மக்கள் எல்லாம் கள்ளழகரை வரவேற்க கிளம்புவாங்க. நீங்க எங்க கிளம்பிட்டீங்க.. திருக்கல்யாணம் பார்க்கவா? கள்ளழகரை வரவேற்கவா?












Click it and Unblock the Notifications