பூர்வீகச் சொத்து.. சொந்த மனை, வீடு விற்பனையில் இழுபறி? பத்திரத்தில் சிக்கலா? இதோ சூப்பர் 8 பரிகாரம்
சென்னை: அனைத்துவிதமான சொத்து விவகாரங்களுக்கும் சட்டரீதியான தீர்வுகள் இருக்கின்றன... எனினும் சிலசமயங்களில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்காமல் போய்விட்டதாக கருதுபவர்கள், அல்லது வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சில பரிகாரங்களை செய்யலாம். இதனை நம்பிக்கையுடன் செய்யும்போது, சொத்து பிரச்சனைகள் மெல்ல தீரும் என்கிறார்கள் பெரியவர்கள்.
பூர்வீக சொத்துக்களை பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளில் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு, சிறிதளவு அரிசியையும், வெல்லத்தையும் கலந்து, கன்று போட்ட பசு மாட்டுக்கு உணவாக, கையாலேயே ஊட்டிவிட வேண்டும் என்பார்கள்.. இதனை தவிர சில எளிய பரிகாரங்கள் உண்டு.

பரிகாரம் 1
சொத்துக்களை இழந்து நிற்போர், அல்லது நியாயமாக வந்து சேர வேண்டிய சொத்துக்கள் கைக்கு வராமல் நிற்போர், அவசரத்துக்கு பணத்தை கடன் தந்துவிட்டு, அது மீண்டும் கைக்கு வராமல் நிற்போர், 27 பஞ்சமிகள் தினமும், மாலை நேரத்தில் சிவன் சன்னதியில் சிகப்பு திரியில் மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரம் கடைப்பிடிக்கும்போது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் 2
வாராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமை நாட்களில், காலை 6 முதல் 7மணி அல்லது இரவு 8 முதல் 9 மணி அளவில், மண் அகல் விளக்கில் கரு நீல துணியில், வெண் கடுகு முடிந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், கைவிட்டு போன சொத்துக்களை மீண்டும் பெறலாம். சொத்து மட்டுமல்ல, இழந்துபோன செல்வம், புகழ், கௌரவம் என அனைத்தையும் திரும்ப பெற்றுவிடலாம்.
பரிகாரம் 3
நீண்ட காலமாகவே உங்களது சொந்த மனை, நிலத்தை விற்பனை செய்ய முடியாமல் இருந்தால், ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை உங்களது நிலத்தின் 4 முனைப்பகுதிகளிலும் கண்டங் கத்திரிக்காயை 4 துண்டாக வெட்டி எறிய வேண்டும். பின்னர் நிலத்தின்4 முனை பகுதியிலும் 4 தக்காளியை கசக்கி பிழிய வேண்டும். பிறகு சீரக தண்ணீரை 4 முனையிலும் தெளித்து, 4 முனையிலும் சிறு குழியை தோண்டி, முனை மழுங்கிய கத்திரிக்கோலை அதில் வைத்து மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். கடைசியாக, நிலத்தின் மீதான சிக்கல் விரைந்து தீர வேண்டும் என்று பிரார்த்திக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் 4
வெள்ளிக்கிழமைகளில் சாலையோரங்களில் இருக்கின்ற வயதான, ஆதரவற்ற நபர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்கி வந்தாலும் பூர்வீக சொத்துக்களிலுள்ள பிரச்சினைகள் சுமூகமாக நீங்கும்.. அதேபோல, தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வந்தால் சட்ட சிக்கல் விரைவில் தீரும்.
பரிகாரம் 5
பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை இருந்தால், சிவப்பு நிற செம்பருத்தி பூவினை, மாலையாக கோர்த்து, அருகிலுள்ள அம்மன் கோயில்களிலுள்ள பெண் தெய்வங்களுக்கு சார்த்த வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் இப்படி அம்பாளுக்கு செம்பருத்தி பூக்களின் மாலையை போட்டு வணங்கி வருவதால் பூர்வீக சொத்தில் உள்ள சிக்கல்கள், இடர்பாடுகள், குறையும்.. அது தொடர்பான வழக்குகளும் உடனே முடிவுக்கு வரும்.
பரிகாரம் 6
பத்திரங்கள் தொடர்பான சிக்கல் ஏற்பட்டு, இதன்காரணமாக சொத்துக்கள் கைக்கு வராத பட்சத்தில், அருகிலுள்ள பச்சை அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற ஆடையை சாற்றி, பத்திரத்தின் நகலை அம்மனின் காலடியில் வைத்து வழிபடும்போது, சிக்கல்கள் தீரும்.
பரிகாரம் 7
பூர்வீக சொத்துக்களை மீண்டும் பெறுவதற்கு முருகப்பெருமானை நாடலாம்.. செவ்வாய்க்கிழமைகளில் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு தாம்பூல தட்டில் செவ்வரளி பூக்களால் 108 முறை, ஓம் என்ற மந்திரத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், பூர்வீக சொத்துக்களை மட்டுமல்ல, இழந்த சொத்துக்களையும் பெற முடியும்.
பரிகாரம் 8
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வரும்போதும், செவ்வாய்க்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபட்டு வந்தாலும், சொத்து வழக்குகளில் நிலவும் சட்டரீதியான சிக்கல்கள் விரைந்து தீரும்.












Click it and Unblock the Notifications