
புரட்டாசி சனிக்கிழமை விரதம்: திருமண தடையா? பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுங்கள்! தோஷம் நீங்கும்!!
சென்னை: புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து அதன் மேல் குழி அமைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றினால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது நன்மையைத் தரும்.
மாவு உருண்டை என்பது ஏழுமலையையும் அதன் மேல் பற்ற வைக்கும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும். மரத்தையே வேங்கடவனாக எண்ணி வேடன் பூஜை செய்து தேனும் தினைமாவும் கொடுத்தான். அவனுக்கு பெருமாள் காட்சி கொடுத்து மோட்சம் அருளினார். இதை நினைவு கூறும் வகையில் தினைமாவுக்கு பதிலாக அரிசி மாவும், தேனுக்கு பதிலாக வெல்லமும் கலந்து உருண்டை பிடிக்கிறோம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம்..புரட்டாசி பிரம்மோற்சவ நாட்களில் ரத்து

புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த நாளாகும். வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

சனிக்கிழமை பெருமாளுக்கு படையல்
புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படையல் போட்டு வணங்குவார்கள். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல்,எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

குத்துவிளக்கு
குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேத்தியங்களை இலையில் பரிமாற வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது பழக்கம்.

மாவிளக்கு வழிபாடு
திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய்,எள் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நெய் ஊற்றி திரிப்போட்டு விளக்கேற்றப்படும்.

திருமண தடைகள் நீங்கும்
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட புணர்ப்பு தோஷத்தினால் ஏற்படும் திருமண தடைகள் நீங்கும். சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபடுகின்றனர் பக்தர்கள்.