கற்பனைக்கு எட்டாத உச்சத்தில் விலைகள் உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன மேஜர் விஷயம்
டெல்லி: அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிர்வால் இந்தியா "எரிபொருள், உரம், அந்நிய செலாவணி" ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு, உரங்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அந்நிய செலாவணி அழுத்தம் இந்திய பொருளாதாரத்திற்கு சவாலாக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலை பல்வேறு நாடுகளிலும் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் சுமார் 7 ருபாய்க்கு மேல் பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்ந்துள்ளது.

நிர்மலா சீதாராமன் பேச்சு
உரங்களுக்கான தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்பதால் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால், உலகின் பெரும் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. மேற்காசிய போரால் விலையேற்றம் அதிகரிக்த்துகொண்டே செல்லும் நிலையில், இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியச் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் 37-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
'அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. எரிபொருள் (Fuel), உரம் (Fertiliser), அந்நியச் செலாவணி (Forex) ஆகிய மூன்று 'எஃப்'களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது தற்போதைய சவால்களின் ஒரு பகுதி மட்டுமே. எரிபொருளைத் தவிர, உரங்களின் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார நிலைக்கு சில சவால்களை உருவாக்கி வருகிறது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் நெருக்கடி என்பது வெறும் தூதரக அல்லது புவிசார் அரசியல் பிரச்சினை மட்டும் அல்ல. இது தொழில்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக எரிபொருள் செலவு, சரக்கு போக்குவரத்தில் தாமதம், கப்பல் போக்குவரத்து கட்டண உயர்வு, மூலப்பொருட்களின் பற்றாக்குறை, பணப்புழக்க அழுத்தம் மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மை போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அச்சத்தை பரப்பும் செயல்கள்
இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சேர்ந்தால் என்ன நிலை உருவாகும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். எனினும், இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார நிலைமை இன்றும் நேர்மறையாகவும் வலுவாகவும் உள்ளது. இந்தியர்களில் ஒரு பகுதியினர், நம் மக்களின் சாதனைகளை மிகவும் விரைவாக குறைத்து மதிப்பிட விரும்புகிறார்கள்.
நல்ல செயல்கள் அனைத்தும் மறக்கப்பட்டு விடுகின்றன. அதற்கு பதிலாக, எதிர்மறை மற்றும் நம்பிக்கையின்மை நிறைந்த ஒரு கதையாடல் உருவாக்கப்படுகிறது. அது சரியானதல்ல. அச்சத்தை பரப்பும் செயல்களை இந்தியாவால் ஏற்க முடியாது. நமது வார்த்தைகளாலும் செயல்களாலும் மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்" என்றார்.














Click it and Unblock the Notifications