ராஜ ராஜ சோழன் சதய விழா தஞ்சையில் கோலாகலம்.. அரசு சார்பில் மரியாதை.. பெருவுடையாருக்கு அபிஷேகம்
தஞ்சாவூர்: பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவிலுக்கு வெளியில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடுகிறது.

அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜ சோழன், சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறது வரலாறு. அதே சதய நட்சத்திரத்தில் 985ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு. சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவன் ராஜராஜன். தஞ்சை கோயில் வடித்தெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜ ராஜ சோழன்.
பொன்னியின் செல்வன் என்பது உள்ளிட்ட 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவரது புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. இவர் பதவியேற்ற 985ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்றைய தினம் கோலாகலமாக தொடங்கியது. திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சதய நட்சத்திர நாளான இன்றைய தினம் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவையொட்டி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரியகோவிலில் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு 16 வகை அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.
ராஜராஜ சோழ மன்னரின் 1038வது சதய விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications