ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரதிஷ்டை தினம்..ராவணனை வதம் செய்த ராமர்..விபீசணன் பட்டாபிஷேகம்
ராமேஸ்வரம்: இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு புனித தீர்த்தங்களில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டு வருவார்கள். அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் திதி கொடுக்கவும் பித்ரு கடன் தீர்க்கவும் ஏராளமானோர் ராமேஸ்வரம் செல்வதுண்டு. ராமாயண இதிகாசத்தோடு தொடர்புடைய இந்த ஆலயத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி ஆலயம் பித்ரு தோஷம் போக்கும் ஆலயமாக திகழ்கிறது. புராண கால சிறப்பு மிக்க இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது.

சீதையை சிறையெடுத்துக்கொண்டு இலங்கை சென்ற ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார் ராமர். ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வழிபட வேண்டும் என்று முனிவர்கள் கூறினர். சிவ பூஜைக்குரிய லிங்கத்தைக் கொண்டு வர அனுமனிடம் கேட்டுக்கொண்ட ராமர், கடலில் தோஷம் நீங்க நீராடி முடித்தார். சிவலிங்கம் கொண்டு வரச்சென்ற அனுமன் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழிபட வேண்டும் என்பதால் கடற்கரை மணலில் சீதையால் பிடிக்கப்பட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தாமதமாக வந்த அனுமன், சிவலிங்க பூஜை முடிந்ததைக் கண்டு கோபமடைந்தார். மணல் லிங்கத்தை வாலினால் கட்டி இழுத்தார் அது முடியவில்லை. உடனே அனுமரை சமாதானப்படுத்திய ராமர், தனக்காக அனுமர் கொண்டு வந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜைகள் செய்த பிறகே சீதை மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படியே தற்போதும் பூஜைகள் நடைபெறுகிறது.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்கமே ராமநாதசுவாமியாகவும், ராமர் ஈஸ்வரனை வணங்கியதாலேயே இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயர் வந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் விழாவே ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக ஆண்டு தோறும் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு சில தினங்களுக்கு முன்பு பிரதிஷ்டை தின விழா தொடங்கப்பட்டது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமபிரான், லெட்சுமணர் ரதவீதிகளின் வழியாக திட்டக்குடி பகுதியில் வந்து 10 தலைக்கொண்ட ராவணன் ராமரை 3 முறை சுற்றி வலம் வந்து, ராமர் தன்னுடைய வேலால் ராவணனை வதம் செய்யும் நிகழ்வானது நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, வதம் செய்யப்பட்ட வேலுக்கு சந்தனம், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, ராமர் லட்சுமணருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராவண வதம் நேற்று முடிவடைந்த நிலையில், காலையில் கோயிலில் இருந்து விபீஷ்ணர் புறப்பட்டு தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு சென்றார், அதன்பின் ராமநாதசுவாமி கோயிலின் நடை சாற்றப்பட்டது. இதையடுத்து, கோதண்டராமர் கோயிலில் ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டபின் பிற்பகல் பொழுதில் ராமர் விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்து பட்டம் கட்டப்பட்டு புனித நீரை தெளித்து பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. இதன் பின் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்து சென்றனர்.
இறுதிநாள் திருவிழாவாக இன்றைய தினம் ராமலிங்க பிரதிஷ்டை கோயிலுக்குள் நடைபெற்றது. அர்ச்சகர் ஒருவர் சிவலிங்கத்தை சுமந்தபடி முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது.












Click it and Unblock the Notifications