சபரிமலை ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்..கொட்டும் வருவாய்..எத்தனை கோடி தெரியுமா?
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 24 நாட்களில் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் அரவணை விற்பனை உள்ளிட்ட பலவற்றின் மூலம் ரூ.125 கோடி கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு ஆண்டு தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது.
பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தியதே அம்பேத்கர்தான்.. திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி
அதேபோல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ஆம்தேதி நடை திறக்கப்பட்டது முதல் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்புக்கு பிறகே சுவாமியை தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தரிசன நேரத்தை அதிகரித்தும் பக்தர்கள் காத்திருப்பு குறையவில்லை.
லட்சக்கணக்கான பக்தர்கள்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி 1,10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
கடும் நெரிசல்
சபரிமலையில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் நீண்ட நேரம் காத்துக்கிடப்பது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பக்தர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே இந்த விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளது. சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளதால் நெரிசலைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஒரு லட்சம் பக்தர்கள் வரும் நாட்களில் அஷ்டாபிஷேகம் உள்பட பூஜைகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும் என்றும், நெரிசல் ஏற்படாமல் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ரூ.125 கோடி வருமானம்
இதனிடையே கடந்த 24 நாட்களில் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் அரவணை விற்பனை உள்ளிட்ட பலவற்றின் மூலம் ரூ.125 கோடி கிடைத்துள்ளது. இதனை செய்தியாளர்களிடம் கூறிய திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் அனந்தகோபன், வருகிற 27ஆம் தேதி மண்டல பூஜை காலம் வரை பக்தர்களுக்கு தேவையான அரவணை, அப்பம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்பம், அரவணை பிரசாதம்
தினமும் 3 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அரவணை டின்களை சொந்தமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பக்தர்கள் வசதிக்காக புதிய 5 திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம், அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட இருப்பதாகவும் அனந்தகோபன் தெரிவித்தார்.
தங்க அங்கி ஊர்வலம்
இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதி நடக்கிறது. மகர விளக்கின் போது திருவாபரணங்கள் சாத்தப்படுவதை போல், மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்படும். இந்த தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. சபரிமலை மண்டல பூஜை காலத்தில், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
டிசம்பர் 23ல் ஊர்வலம்
இதனை முன்னிட்டு வரும் 23 ம் தேதி ஆரன்முலா பார்த்த சாரதி கோவிலில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க அங்கி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் டிசம்பர் 26 ம் தேதி பம்பை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். டிசம்பர் 27 ம் தேதி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும்.
மண்டலபூஜை
அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்யம், அபிஷேகம், கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம், உச்சிக்கால பூஜை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை என வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இவற்றோடு காலை 11 மணிக்கு களபாபிஷேகமும், அதைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மண்டல பூஜையும் நடத்தப்படும். பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு ஹரிவராசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.
அதன் பிறகு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31 ம் தேதி நடைதிறக்கப்படும். மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். ஐயப்பனின் இந்த திருவாபரணங்கள் பந்தள அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகர விளக்கு பூஜைகள் முடிந்த பின்னர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.