Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை.. தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் நாளைய தினம் மண்டல பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மண்டல பூஜை: சபரிமலையில் மண்டல பூஜை நாளை நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Sabarimala Mandala Pooja will be held on Tomorrow Ayyappan shine Thanga Angi today

பக்தர்கள் கூட்டம்: கடந்த 4 நாட்களாக தினசரி பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. நேற்று வரை சபரிமலையில் 26.60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18ம்படி ஏறும் வேகம் குறைந்ததால் இந்த வருடம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 24ஆம் தேதியன்று மொத்தம் 1,00,969 பக்தர்கள் 18ம் படி வழியாக ஏறி தரிசனம் செய்தனர். புல் மேடு வனப்பாதை வழியாக மட்டும் 5798 பேர் வந்தனர். 16 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்து நின்றனர்.

பக்தர்கள் கோபம்: ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் எருமேலி, பொன்குன்னம், பாலா, வைக்கம் உள்பட பல இடங்களில் பக்தர்களின் வாகனங்களை போலீசார் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இவர்களுக்கு பல மணி நேரமாக உணவோ, குடிநீரோ உள்பட எந்த வசதியும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் மறியல்: இதனால் எருமேலி, பாலா, வைக்கம், பொன்குன்னம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல மணிநேரமாக தங்களுக்கு உணவோ, குடிநீரோ உள்பட எந்த வசதிகளும் கிடைக்கவில்லை என்றும், பம்பைக்கு செல்ல அனுமதித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிட முடியும் என்றும் பக்தர்கள் கூறினர். இதையடுத்து வாகனங்களை அனுமதித்தனர். இதன் பிறகே பக்தர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

தங்க அங்கி: இதனிடையே ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வந்தடைந்தது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973ஆம் ஆண்டு ஐயப்பனுக்கு 450 பவுன் எடையுள்ள தங்க அங்கியை வழங்கினார். ஆண்டு தோறும் ஐயப்பனுக்கு மண்டலபூஜையின் போது தங்க அங்கி அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று மாலை தங்க அங்கி கொண்டு வரப்பட்டு 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜொலித்த ஐயப்பன்: தங்க அங்கியானது 18ஆம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

கட்டுப்பாடு: தங்க அங்கி இன்று சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டதை முன்னிட்டு இன்று பிற்பகலில் 18ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. 64 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 11 மணிக்குப் பின்னர் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு பக்தர்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் தான் பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

கோர்ட் உத்தரவு: இதனிடையே சபரிமலையில் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட பக்தர்களுக்கு குடிநீர், உணவு உட்பட எந்த வசதியும் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து விடுமுறை தினம் என்றாலும் நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் தேவசம்போர்டு அமர்வு உடனடியாக கூடியது. அப்போது பக்தர்கள் எந்த வசதியும் இல்லாத இடத்தில் பக்தர்களை தடுத்து நிறுத்தி வைக்கக்கூடாது. அவர்களுக்கு உடனடியாக குடிநீர், உணவு மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் இதில் டிஜிபி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டல பூஜை: இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளைய தினம் நடைபெற உள்ளது. நாளைய தினம் 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

வருமானம் எவ்வளவு: சபரிமலையில் மண்டல சீசன் துவங்கி 39 நாட்களில் ரூ.204 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்தது. நன்கொடையாக ரூ.63.89 கோடி கிடைத்துள்ளது. அரவண பிரசாதம் விற்பனை மூலம் ரூ.96.32 கோடி கிடைத்துள்ளது. அப்பம் விற்பனை மூலம் ரூ.12 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. மண்டல காலம் தொடங்கி நேற்று வரை 31,43,163 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். தேவசம் போர்டு அன்னதான மண்டபம் மூலம் நேற்று வரை 7,25,049 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

மகர ஜோதி: பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30ஆம் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+