சுவாமியே சரணம் ஐயப்பா.. ஐயப்பனை பார்க்க முடியலையா? பிரசாதம் வீடு தேடி வரும்.. இதை மட்டும் செய்யுங்க!
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பனை நேரில் தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்கும் வீடு தேடி பிரசாதம் வரும் வகையில் தபால் துறையும் திருவிதாங்கூர் தேவசம் போடும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில் சபரிமலைக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஆறு மணிக்கு பூஜைக்கு பின் அந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சத்திரம் பகுதியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் மட்டும் இல்லாது, புதிதாக மாலை அணிந்த கன்னி சாமிகளும் ஐயப்பனை தரிசிக்க ஆண்டு கூடுதலாக படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் வயது வந்த பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாது. இருந்த போதும் அவர்களும் ஐயப்பன் அருள் பெறும் வகையில் பக்தர்களுக்கு வீடு தேடி பிரசாதம் வரும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டும், இந்திய தபால் துறையும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பக்தர்களின் வேண்டுகோள் படி கடந்த பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் ஐயப்பன் பிரசாதத்தை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தங்கள் பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்களிலும் மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்த பிரசாத கிட்டில் அரவணை பிரசாதம், அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், மளிகைபுரத்து அம்மன் குங்குமம், மஞ்சள் ஆகியவை இருக்கும் ஒரு டின் அரவணை அடங்கிய கிட் 520 ரூபாய்க்கும், 4 டின் அரவணை கிட் 960 ரூபாய்க்கும், 10 டீன் அரவணை 1760 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த ஐயப்பன் சீசனிலும் தபால் துறை மூலம் பக்தர்களுக்கு வீடு தேடி பிரசாதம் வரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 39 லட்சம் பின் அரவணை இருப்பில் இருக்கும் நிலையில் சீசன் தொடங்கிய பின்னரும் உற்பத்தி நடைபெற்று வருவதால் பக்தர்கள் தங்கு தடையின்றி பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications