சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா.. சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்ட நிகழ்வுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குகிறது. இதனால் "எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி" என்ற சிறப்புப் பெயரும் இந்த கோயிலுக்கு உண்டு.இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறுது வழக்கம். இந்த விழா தான் இந்த கோயிலின் மிகப்பெரிய விழாவாகும்.

இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும். இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும். சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஆடி மாதம் பிறந்துவிட்ட நிலையில் விரைவில் நடைபெற போகிறது.
இந்நிலையில் சேலம் மேட்டூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஆ. ராதா கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார் . அந்த மனுவில் அவர் கூறுகையில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும். இதனை ஒட்டி திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த தேரோட்டத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இந்த ஆண்டு ஆடி மாதம் நடைபெற உள்ள தேரோட்ட திருவிழா சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற இதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரி கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரிக்க வந்தது
அப்போது இந்த வழக்கை விசாரித்து நீதிபதி மனுதாரர் ராதாகிருஷ்ணனின் மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications