ரங்கா..ரங்கா..ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம் கோலாகலம்..ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்த நம்பெருமாள்
பூபதி திருநாள் என்றழைக்கப்படும் தைத்தேரோட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி: ரங்கா..ரங்கா..என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முழக்கமிட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருத்தேரில் எழுந்தருளி நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவை விட பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமானதாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்த திருத்தேரோட்டம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பூபதித்திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குறியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயமாகும். இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. நாழிகேட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம்,கார்த்திகை கோபுரம்,ரங்கா ரங்கா கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் 1, தெற்கு கட்டை கோபுரம்-2 ராஜகோபுரம்.12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்,உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி சாலி அலங்காரம்.
கொடுக்கப்பட்டுள்ள 16 ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.
ஸ்ரீரங்கநாதருக்கு 7 நாச்சியார்கள் உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார்,கோதை நாச்சியார், ரெங்கநாச்சியார் ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் விருப்பன் திருநாள்,வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள், பாரிவேட்டை, ஆதி பிரம்மோத்சவம் ஆகிய ஏழு உற்சவங்களில் மட்டும் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறும். முக்கிய விழாக்களில் தைத்தேர் திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார், விழாவின் 2ஆம் நாளான 27ஆம் தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், 28ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தளினார்.
29ஆம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 30ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 31ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பிப்ரவரி 1ஆம் தேதி நெல் அளவு கண்டருளினார். நேற்றைய தினம் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூபதி திருநாள் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதனையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா..ரங்கா என பக்தி முழக்கமிட்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்ததை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
நாளைய தினம் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் பிப்ரவரி 5ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.