ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி.. செல்வ வளம் தரும் பச்சை பரப்பு சீர்வரிசை
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஅத்ய்யன உற்சவம் பச்சை பரத்தல் நிகழ்ச்சியுடன் பகல் பத்து உற்சவமும் தொடங்கியது.
ஆண்டாள் ரங்கமன்னார்: மனதிற்கு பிடித்தவரை கணவராக அடைந்தாலும் பெற்றவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு செல்வது என்றாலே பெண்களுக்கு தனி மகிழ்ச்சிதான். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது கணவர் ரங்கமன்னாருடன் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வரும் ஆண்டாளுக்கு மகிழ்ச்சியோடு விருந்து கொடுக்கின்றனர் பெரியாழ்வார் குடும்பத்தினர். ஆண்டுதோறும் இந்த வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுகிறது.

சீர்வரிசை: ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியுள்ளது. கணவர் ரங்கமன்னாருடன் பிறந்த வீட்டில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு காய்கறிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளை படைத்து வரவேற்பு அளித்தனர்.
ஆண்டாள் திருப்பாவை: மார்கழி மாதத்தில் பாடப்படும் திருப்பாவை அருளிய ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி திருக்கோவில். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் அவதரித்த புனித பூமி. பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான கோவில்.
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீஆண்டாள், இக்கோவிலில் சயன திருக்கோலத்தில் உள்ள வடபத்ரசாயி பெருமாளை நினைத்து தான் திருப்பாவையை இயற்றியுள்ளார். 108 திவ்ய தேசங்களிலும் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இல்லாமல் நடைபெறாது என்பது தனிச்சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்றதாகும்.
பச்சை பரத்தல்: வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் சீர்வரிசை பெறுவாள். பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் ஆண்டாளுக்கு சீர்வரிசை வைபவம் நடக்கிறது. மார்கழி மாதம் பகல்பத்து உற்சவத்தில் முதல் நாளன்று தன் கணவருடன் தன் தாய் வீட்டுக்கு எழுந்தருள்கிறாள் ஸ்ரீஆண்டாள். இவ்வைபத்தின் போது ஆண்டாள், ரெங்கமன்னார் இருவரையும் பெரியாழ்வார் வழிவந்த வேதபிரான் பட்டர்கள் வரவேற்கிறார்கள்.
ஆண்டாளுக்கு விருந்து: தம்பதிகளுக்கு விருந்தாக வெல்லப்பாகு சேர்த்த கொண்டைகடலை பருப்பான மணிபருப்பையும், திரட்டுப்பாலையும் அளிக்கிறார்கள். வேதபிரான் பட்டர் வீட்டுத் திண்ணையில் பூசணிக்காயிலிருந்து நெல்லிக்காய் வரை மற்றும் கரும்புக்கட்டு, பழவகை வரை அனைத்தையும் சீர்வரிசையாக பரப்பி வைக்கிறார்கள். இதனை பச்சை பரப்பு என்பர்.
பகல்பத்து திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரங்கமன்னார் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் பட்டர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் வீட்டிற்கு வருகை தந்தார்.

பச்சை காய்கறிகள்: அப்போது பச்சை காய்கறிகள் பரப்பி ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து பெரியாழ்வார் குடும்பத்தின் சார்பில் வரவேற்றனர். வேதபிரான் பட்டர் வீட்டுத் திண்ணையில் பூசணிக்காயிலிருந்து நெல்லிக்காய் வரை மற்றும் கரும்புக்கட்டு, பழவகை வரை அனைத்தையும் சீர்வரிசையாக பரப்பி வைத்திருந்தனர். தம்பதிகளுக்கு விருந்தாக வெல்லப்பாகு சேர்த்த கொண்டைக்கடலை பருப்பான மணிபருப்பும், திரட்டுப்பாலும் அளிக்கப்பட்டது.
செல்வ வளம் பெருகும்: இந்த பச்சைப்பரப்பு சீர்வரிசையை தரிசனம் செய்தால் நம்முடைய வீட்டிலும் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கை. தாய் வீட்டிற்கு கணவர் ரங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள்,ரங்கமன்னார் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தை வந்தடைந்தனர். இதையடுத்து அரையர் வியாக்கியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நேராக போய் ஆண்டாளை தரிசிக்க முடியாதவர்கள் இதனை படித்தாலும் ஆண்டாளை தரிசித்து பச்சைப்பரப்பு சீர்வரிசையை தரிசனம் செய்ததற்கு சமம்தான்.












Click it and Unblock the Notifications