Bye குரோதி! நாளை தமிழ் புத்தாண்டில் பிறக்கும் விசுவாவசு! கனி காண உகந்த நேரம் எது? வழிபடுவது எப்படி?
சென்னை: தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படும் நிலையில் வழிபாட்டுக்கான நேரத்தையும் அதற்கான முறையையும் பார்க்கலாம். மேலும் நாளை பிறக்கும் ஆண்டின் பெயர் என்ன என்பதையும் பார்க்கலாம்.
தற்போது நடைபெற்று வரும் குரோதி ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. நாளை விசுவாசுவ ஆண்டு பிறக்கிறது. நாளை சித்திரை 1 பிறக்கும் நிலையில் இந்த நாளை எப்படி வணங்க வேண்டும், வழிபட உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம்.

சூரிய பகவான் தனது பயணத்தை 12 ராசிகளிலும் முடித்துவிட்டு மீண்டும் மேஷ ராசிக்கு செல்வதையே தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். நாளை விசுவாவசு ஆண்டு தொடங்குகிறது. இந்த நாளில் நாம் வழிபாடுகள் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்.
வீடு வாசலை சுத்தம்
இதற்காக இன்றைய தினமே வீடு வாசலை சுத்தமிட்டு மாக்கோலமிட வேண்டும். இரவு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் வைத்து, தங்க நகைகள், வெள்ளி நகைகள், காசுகள் இவற்றை வைத்து அத்துடன் வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து கண்ணாடியை வைக்க வேண்டும்.
கண்ணாடி
அந்த கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும் என்றால் அதில் நாம் வைத்திருக்கும் பணம், நகை எல்லாம் பிரதிபலிக்கும் வகையில் வைக்க வேண்டும். இதைத்தான் கனி காணுதல் என்பர். காலை தலைக்கு குளித்துவிட்டு நெற்றியில் விபூதி, குங்குமம், தலையில் பூ வைத்துக் கொண்டு நேராக பூஜை அறைக்கு வந்து கண்ணாடி வழியாக அனைத்து மங்களகரமான பொருட்களையும் பார்க்கலாம்.
வழிபாடு நடத்த வேண்டும்
இதை வீட்டில் இருக்கும் அனைவரும் செய்ய வேண்டும். காலையில் குளிக்க முடியாவிட்டாலும் பல் துலக்கிக் கொண்டு, முகத்தை அலம்பிவிட்டு இதை காணலாம். பிறகு குளித்து முடித்துவிட்டு வந்து பூஜை செய்து கொள்ளலாம். நெய்வேத்தியத்திற்கு சர்க்கரை பொங்கல் செய்து வழிபடலாம். இந்த நாளில் குலதெய்வத்தையும் வழிபட வேண்டும்.
நகை
புதிதாக நகை வாங்கினாலும் சரிதான்! நகை விற்கும் விலைக்கு நகையா என கேட்பது புரிகிறது. முடியாவிட்டால் நம்மிடம் இருக்கும் நகைகளை வைக்கலாம். நெய்வேத்தியம் செய்துவிட்டு தட்டில் வைத்த பழங்களை உண்ணலாம்.
மாங்காய் பச்சடி
சிலர் மாங்காய் பச்சடி செய்யும் வழக்கம் உள்ளது. அதாவது புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகள் இருக்கும்படி இதை செய்வார்கள், மாங்காய், உப்பு, மிளகாய் பொடி, வெல்லம், சிறிதளவு வேப்பம்பூ உள்ளிட்டவைகளை போட்டு தயார் செய்வது வழக்கம்.
வழிபட வேண்டிய நேரம்
தமிழ்ப் புத்தாண்டுக்கு வழிபட வேண்டிய நேரம் என பார்த்தால் காலை 6 மணி முதல் 7.20 வரையும் 9.10 மணி முதல் 10.20 மணி வரையும், பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரையும் செய்யலாம்.
60 ஆண்டுகள்
தமிழ் ஆண்டுகள் 60 ஆண்டுகளை கொண்டது. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடிவடையும். மீண்டும் பிரபவ ஆண்டு தொடங்க 60 ஆண்டுகளாகும். தற்போது அந்த வரிசையில் 39ஆவது ஆண்டான விசுவாவசு நாளை பிறக்கிறது. இந்த ஆண்டு சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாக விளங்குகிறது.












Click it and Unblock the Notifications