உயரே பறக்கும் தக்காளி.. காய்கறிகள் விலை இன்னும் உச்சத்தை தொடும்.. வெள்ளம்.. எச்சரிக்கும் பஞ்சாங்கம்
சென்னை: நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி காய்கறிகள் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு குறித்து பல மாதங்களுக்கு முன்பே தமிழ் பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது. இப்போது மழை குறைவாக இருந்தாலும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என சோபகிருது வருட ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது.
நம்முடைய முன்னோர்கள் சுப காரியங்களுக்கு பஞ்சாங்கத்தை பார்த்து நாள் குறிப்பார்கள். நவ கிரகங்களின் பயணம், கூட்டணி, எந்த ராசியில் எந்த கிரகத்தோடு இணைந்து செயல்படும் என்பதை வைத்து பஞ்சாங்கத்தில் எழுதப்படுகிறது. சென்னை மழை வெள்ளம், புயல்கள் பற்றியும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டு உள்ளது.

வானிலை ஆய்வு மையம் சொல்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே எந்த மாதத்தில் மழை வெள்ளம் ஏற்படும், அதில் எந்த பகுதி அதிகமாக பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டிருப்பதுதான் சிறப்பு. கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. காய்கறிகள் விலையும் உயரே பறக்கிறது. சாதாரண மக்களால் தக்காளி, வெங்காயம், காய்கறிகள் பக்கம் திரும்பி பார்க்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வைகாசி மாதத்தில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் விலை சரிவடைந்துதான் இருந்தது இதனால் பல விவசாயிகள் கவலையில் இருந்தனர். மஞ்சள் விலை உச்சத்தை தொட்டதால் அதனை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தமிழ் பஞ்சாங்கத்தில் வைகாசியில் மஞ்சள் விலை ஏறும் என கணித்து எழுதப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் காய்கறிகளின் விலை ஏறும் என கணிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை புதிய நோய் தாக்கும் என எழுதப்பட்டுள்ளது. ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை உயரும். மணல் பிரச்சினை தீரும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஆவணி மாதத்தில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொடும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தற்போது குறைவாக பெய்தாலும் புரட்டாசி மாதத்தில் பருவமழை நன்றாக பெய்ய வாய்ப்புள்ளதாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கணித்துள்ளது. விவசாயம் நன்றாக இருக்கும் எனவும் எழுதப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பலத்த மழை பெய்யும் எனவும் நெற்பயிர்கள் பாதிக்கும் எனவும் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதத்தில் பெருமழையால் உணவுப்பொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் எனவும் தமிழ்நாட்டில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மார்கழியில் உணவுப்பொருட்களின் விலை ஏறி இறங்கும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. விலைவாசி உயர்வு பற்றி பல மாதங்களுக்கு முன்பே கணித்து பஞ்சாங்கத்தில் அச்சிட்டுள்ளனர் நமது முன்னோர்கள்.

சோபகிருது வருட வெண்பாவில்
"சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்
உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகு மென்றே யுரை". என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சோப கிருது வருடத்தில் மக்கள் எல்லா நலன்களையும் பெறுவர். கோப குணங்கள் குறையும். போட்டி, பொறாமை குணங்கள் இல்லாமல் போகும். நற்பலன்கள் மேலோங்கும். சுப காரியங்கள் நடந்தேறும். உலகின் பழமையான நகரங்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். மழை சிறப்பாக பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நான்காமிடம் சுக்கிரன், குரு பார்வை பெற்று நான்காமிடத்திற்குரிய செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இவ்வருடம் தொழில் விருத்தி நன்றாக இருக்கும். வெண்பட்டு ஜவுளி, தங்கம், கட்டுமானப்பொருட்கள், தொழில் நன்கு விருத்தியடையும். நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும். சென்ற வருடத்தை விட இவ்வருடம் விவசாயிகள் நல்ல லாபத்தை அடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications