Thai Amavasya 2025: தை அமாவாசை இன்றா நாளையா? தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது?
சென்னை: நாளை தை அமாவாசை அனுசரிக்கப்படும் நிலையில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பதையும் எப்போது படையலிடலாம் என்பதையும் பார்க்கலாம்.
அமாவாசைகளில் மிக முக்கியமானது தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த அமாவாசையில் தை மாதத்தில் வரும் அமாவாசை நாளை ஆகும்.

நாளைய தினம் புனித நதிகளில் நீராடுவதும் தானங்கள் அளிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். பாவங்களில் இருந்து விடுபடுவதற்கும் ஏற்ற நாளாக இந்த அமாவாசை கருதப்படுகிறது.
மேற்கண்ட ஆடி அமாவாசை, மகாளய அமாவாசையை விட இன்றைய தினம் தை அமாவாசை மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதும் பல தலைமுறை பாவங்களில் இருந்து விடுபடவும் முடியும்.
மார்கழி மாதம் என்பது தேவலோகத்திற்கு அதிகாலையாகும். அதாவது பிரம்ம முகூர்த்தம் என சொல்வோமே அந்த காலம். அது போல் தை மாதம் என்பது பொழுது விடிய தொடங்கும் மாதம். இதை உத்திராயண காலத்தின் துவக்கம் என்கிறார்கள். தேவர்களுக்கு சூரிய உதய காலமாக இருப்பதால் இந்த தை மாதம் சிறப்பானது.
இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ஆம் தேதி இன்று இரவு 8.10 மணிக்கு தொடங்கி ஜனவரி 29ஆம் தேதி இரவு 7.21 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அது போல் ஜனவரி 29ஆம் தேதி காலை 9.21 மணிக்குத் தொடங்கி ஜனவரி 30ஆம் தேதி காலை 8.59 மணி வரை பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் வருகிறது.
பெருமாளை நினைத்து பிண்ட தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சூரிய பகவானை சாட்சியாக வைத்தே கொடுக்க வேண்டும். எனவே சூரிய உதயத்திற்கு முன்பு குளித்துவிட்டு தர்ப்பணம் கொடுத்தல் சிறப்பு. அதாவது காலை 6 - 7.20 மணி வரையும் காலை 9 முதல் 11.55 மணி வரையும் தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நேரங்கள் ஆகும்.
திருவோண நட்சத்திர காலத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்கு உகந்த நேரம் 9.21 முதல் 11.55 வரை ஆகும். அமாவாசை அன்று 5 இலை போட்டு அதில் உணவு வைத்து படையலிட்டு காக்கைக்கு வைக்கும் பழக்கம் உண்டு.
எனவே இதை பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை செய்யலாம். தை அமாவாசை அன்று யாருக்காவது உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். அதுவும் முடியாவிட்டால் உபத்திரம் செய்யாமலாவது இருங்கள்.












Click it and Unblock the Notifications