யோகங்களை அள்ளி தரும் தைப்பூச வழிபாடு.. பிரகாசமாய் ஜொலிக்க வைக்கும் பவுர்ணமி பூஜை! ’இதை’ மறக்காதீங்க!
சென்னை: தமிழர்களின் முழுமுதற் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த தைப்பூச விழா உலகெங்கும் இருக்கும் முருகன் ஆலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் இணையும் நாள் தான் தைப்பூசம். இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறி நல்வாய்ப்புகள் எளிதாய் அமையும்..
'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. சஷ்டி, விசாகம் பூசம், உத்திரம் நட்சத்திரங்களில் முருகனை வழிபடுவது மிகச் சிறந்த பலன்களை தரும். குறிப்பாக வைகாசியில் வரும் விசாகம், தை மாதத்தில் வரும் பூசம், பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது ஆண்டாண்டு காலமாய் உள்ள பழக்கம்.

அப்படி ஒரு மிகச்சிறந்த வரங்களைத் தரும் விரதம் தான் தைப்பூசம். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் செல்வம், வளர்ச்சி உள்ளிட்ட நற்பலன்கள் கொட்டிக் கிடக்கும். அன்றைய தினம் விரதம் இருந்து முருகன் படத்துக்கு மஞ்சள் சிகப்பு நிற பூக்களால் அலங்கரித்து நெய்வேத்தியம் செய்து வழிபடுவது முருகனை மகிழ்விக்கும்.
இந்தாண்டு தைப் பூசம் நட்சத்திரம் பிப்ரவரி மாலை 6 மணிக்கு துவங்கி பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 6.34 வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த நாள் முழுவதும் முருகனை வழிபடலாம். அதிகாலை வீட்டை சுத்தம் செய்து முருகனுக்கு உகந்த பாடலை பாடி உப்பில்லா சாப்பாட்டை சாப்பிட்டு விரதம் முடிப்பது மிகச் சிறப்பானது. பௌர்ணமி வழிபாடு பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் வழக்கங்களில் ஒன்று. தை மாத பௌர்ணமி தான் தைப் பூச திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
உத்திராயண புண்ணிய காலமான தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் முதல் புண்ணிய காலமாக தை மாத பௌர்ணமி வருகிறது. இந்த நாட்களில் விருப்ப தெய்வங்களின் பார்வை நம் மீது நேரடியாக படும் என்பது ஐதீகம். தை அமாவாசைக்கு எப்படி சிறப்புகள் உள்ளதோ அதே போல தை பௌர்ணமி விரதத்திற்கும் அதிக பலன்கள் உண்டு. முழு நிலவு பிரகாசமாக வானில் தோன்றும் இந்த நாளில் பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் நல்ல அதிர்வலைகள் ஏற்படுகிறது.
இந்த நாளில் வழிபாடு செய்வது குறிப்பாக குலதெய்வ வழிபாடு, முருக வழிபாடு நம் துண்பங்கள் அனைத்தையும் துடைத்து வாழ்வை ஒளிர செய்யும். தைப் பூசம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அன்றைய நாளில் தான் சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடல் அரசனாக மக்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் உமையவள் வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இது தான்.
அறிவு கடவுள் என அழைக்கப்படும் பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நாளில் புண்ணிய நதிகளில் நீராடினால் அறிவாற்றல் பெருகி மனக் குழப்பங்கள் அகலும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் விளக்கேற்றி முருகனையும் சூரிய பகவானையும் வழிபட்டாலே போதும். சூரியனுக்கு வெல்லம் கலந்த பாயாசத்தை நெய் வேத்தியமாக படைத்தால் ஆயுள் விருத்தியாகும்.












Click it and Unblock the Notifications