தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர்: சித்திரை தேரோட்டம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். நான்கு மாட வீதிகளில் வலம் வரும் திருத்தோரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அதன் கம்பீரத்தை பறைசாற்றுகிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் பெரியகோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

சித்திரை திருவிழா ஆண்டு தோறும் 20 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். தற்போது 18 நாட்கள் நடைபெறுகிறது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்றுபோன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்கர் மன்னர்கள், அவர்களை தொடர்ந்து மராட்டிய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. பல ஆண்டு காலம் தேரோட்டம் நடைபெறாமலேயே சித்திரை திருவிழா நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதன்மூலம் சித்திரை திருவிழாவும் புத்துயிர் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் 15ஆம் நாளன்று தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி, அம்மன் வீதிஉலா 4 ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.
தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications