பெண்களின் சபரிமலை.. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா.. காப்பு கட்டிய பக்தர்கள்
திருவனந்தபுரம்: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25ஆம்தேதி நடைபெற உள்ளது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரி்மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு என்ன அப்படி ஒரு சிறப்பு என்று பல புராண கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை, பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே இங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் தோன்றியதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள். அந்த சிறுமியைக் கண்ட பக்தர், அம்மனே சிறுமியின் உருவில் வந்திருப்பதாக எண்ணினார். அதே நேரம் பக்தரைப் பார்த்து அந்த சிறுமி, ஐயா என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா? என்று கேட்டாள்.
அன்னையின் உருவமாக அந்த சிறுமியைக் கண்ட பக்தருக்கு அவளை பிரிய மனம் வரவில்லை. எனவே அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க நினைத்தார். அதை அந்த சிறுமியிடம் அவர் சொல்ல முற்பட்டபோது, சிறுமி மறைந்தாள்.
சிறுமி வடிவில் வந்தது அம்பாள் தான் என்பதை எண்ணி, பக்தர் மகிழ்ச்சியடைந்து வீடு திரும்பினார். அன்று இரவு உறங்கும் போது பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள் என்றாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அம்மனை வழிபட்டார். அதுவே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயமாக உருவானதாக கோவில் வரலாறு சொல்கிறது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆலய நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பெண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த பொங்காலை திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா இன்றைய தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.
இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் 26ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications