அசுரரை வென்ற இடம்..இது தேவரை காத்த இடம்! திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா கோலாகல தொடக்கம்
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடி அரோகர கோஷம் முழுங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழர் போற்றும் குமரப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்து மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும் மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித்திருவிழா புகழ் பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 2 மணிக்கு உத மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து கொடி மரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க முருகப் பெருமானை வணங்கினர். அதன் பின்னர் கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் தர்ப்பை புல் கொண்டு அலங்கரிக்கட்டு விஷேச சோடச தீபாராதனையும் நடைபெற்றது.

வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி வரை பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்க உள்ளனர். 12 நாட்கள் நடைறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஐந்தாம் நாள் குடவரைவாயில் தீபாராதனையும், ஏழாம் நாள் (30.08.2024) அன்று முருகப் பெருமான் சிவப்பு சாத்தி கோலத்திலும் , எட்டாம் நாளில் (31.08.2022) பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி காட்சி கொடுக்க உள்ளார் .

செப்டம்பர் 2 ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் வரக்கூடிய பக்தர்களின் வசதிகளுக்காக கோவில் வளாகத்தில் கூடுதலாக கழிப்பறை வசதிகளும் , 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப் பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த் ராஜ் தலைமையில் கூடுதலாக 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications