திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்.. அரை மணி நேரத்தில் முடிந்த ரிசர்வேசன்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தள பக்கத்தில் வெளியான அரை மணி நேரத்தில் முன்பதிவு முடிந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இம்மாதம் 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் அரை மணி நேரத்தில் விற்று தீர்த்தது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் தினசரி 20,000 வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தை என தினமும் 60 முதல் 70,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இம்மாதம் 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு ரிசர்வேசன் செய்ய இணைய தளத்திற்கு சென்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேர தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். அடுத்தடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்தது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்கள் எண்ணிக்கை திருப்பதியில் குறைக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதற்காக திருப்பதியில் 9 இடங்களில் 90 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மட்டுமே டோக்கன்களை வாங்கி தரிசனத்திற்கு செல்கின்றனர். எனவே கவுண்டர்கள் அமைக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை குறைத்த தேவஸ்தானம் தற்போது நான்கு இடங்களில் உள்ள 40 கவுண்டர்களில் மட்டுமே பக்தர்களுக்கு டோக்கன்களை வழங்கி வருகிறது.
எனவே பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள இரண்டாவது சத்திரம், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் செயல்படும் கவுண்டர்களில் டோக்கன்களை வாங்கி ஏழுமலையானை இலவசமாக வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 11ஆம் தேதி வரைக்கும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதேபோல் இம்மாதம் 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை திருப்பதி திருமலையில் அறைகள் தேவைப்படும் பக்தர்கள் நாளை காலை 10 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் தங்கும் அறைகளின் வாடகை இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையான் கோயில் அருகே உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகையில் அறை ஒன்றுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அந்த அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை 1,700 ஆக தேவஸ்தான நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
சிறப்பு வகை தங்கும் விடுதிகளுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2,200 ஆக விலை அதிகரித்துள்ளது. அறைகளின் வாடகையை எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளது, பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விரைவு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இனி இலவச தரிசனம் மூலம் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications