திருமலை திருப்பதிக்கு போறீங்களா? அப்போ அக்டோபர் மாதம் இந்த 10 நாட்களை காலண்டரில் குறிச்சி வைங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆர்ஜித சேவைகள், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள், கல்யாண சேவை, தோமலா சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் சாதாரண பக்தர்களும் பிரம்மோற்சவ காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான்! அந்த வகையில் இந்த ஆண்டு சிறப்பு தரிசனங்கள், சேவைகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் போது சுவாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் வருவார்கள்.
எனவே, அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பல ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3ம் தேதி (அங்குரார்ப்பணம்) முதல் 12ம் தேதி வரை (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வரை) தினமும் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் விஐபி தரிசனத்தை அதிகாரி பதவியில் உள்ள புரோட்டோகால் உயரதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அது போல் கடந்த 20 ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானம் மேலும் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது திருமலையில் தங்குவதற்கு நன்கொடையாளர்கள் யாருக்கும் அறை வழங்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவாரியின் பிரம்மோற்சவத்தில் சாமானியர்களும் கலந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கும் தங்கும் அறைகள் ஒதுக்க வேண்டும்.
எனவே இந்த 9 நாட்களும் நன்கொடையாளர்கள் யாருக்கும் திருமலையில் தங்குவதற்கு அறை வழங்க முடியாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பிரம்மோற்சவத்தின் போது நன்கொடையாளர்களுக்கான திட்டங்கள் செயல்படாது. வேண்டுமானால் அக்டோபர் 4, அக்டோபர் 12 ஆகிய இரு தினங்கள் மட்டும் சலுகைகளை பொருத்து நன்கொடையாளர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications