நாளை ஆடி கிருத்திகை பெருவிழா: இன்று தங்கம், வைர அலங்காரத்தில் திருத்தணி முருகன்! அரோகரா!
திருத்தணி: நாளை அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் ஆடி பரணி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர்.
முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் கிருத்திகை ஆகும். அதிலும் மாதந்தோறும் கிருத்திகைகள் வந்தாலும் ஆண்டுக்கு 3 முறை வரும் கிருத்திகைகள் மிகவும் முக்கியமானதாகும். உத்திராயன காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம், தட்சிணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதம் வரும் ஆடி கிருத்திகை ஆகியவை ஆகும்.

இந்த 3 கிருத்திகைகளில் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நாளில் பலவிதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். ஆடிக் கிருத்திகை அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். இதற்காக பக்தர்கள் பால் குடம் ஏந்தி வருவது வழக்கம்.
ஆடிக் கிருத்திகையில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். குழந்தை வரம், திருமணம் , பதவி உயர்வு , செவ்வாய் தோஷம் உள்ளிட்டவைகளுக்கு வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும். ஆடிக் கிருத்திகை என்றாலே நினைவுக்கு வருவது திருத்தணி முருகன் கோயில்தான்.
இந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆடி பரணி விழா திருத்தணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல ஆயிரம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர். நாளை மறுநாள் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம். திருத்தணி கோயிலில் ஐந்து நாட்கள் விழா நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு படையெடுத்துள்ளனர். இன்று முருகனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு வைர முத்துக் கல்லும் பொருத்தப்பட்டிருந்தது. ஆடிக் கிருத்திகை நாளையொட்டி திருத்தணிக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாளை மதியம் 2.41 மணிக்கு கார்த்திகை தொடங்குகிறது. இது அடுத்த நாள் 30 ஆம் தேதி பகல் 1.40 மணி வரை இருக்கும் என தெரிகிறது. பொதுவாக பரணியிலேயே கார்த்திகை விரதத்தை தொடங்கிவிடுவது நல்லது.












Click it and Unblock the Notifications