குரோதி ஆண்டின் கடைசி பவுர்ணமி இன்று! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்றைய தினம் பவுர்ணமியை முன்னிட்டு எந்த நேரத்தில் கிரிவலம் வந்து வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பவுர்ணமிக்கு மாதாமாதம் கிரிவலம் செல்வோர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த கோயிலை சுற்றியுள்ள 14 கி.மீ. தூர மலை பாதை பக்தர்கள், காலம்காலமாக சுற்றி வருகிறார்கள். அது போல் ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் கிரிலம் வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நடைமுறை யார் தொடங்கிவைத்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு எல்லா நாட்களும் ஏற்ற நாளாகும். எந்த மாதத்தில் எந்த நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம்.
ஆனால் பலர் பவுர்ணமியில் செல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இது மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலை என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பவுர்ணமி ஏப்ரல் 12 ஆம் தேதியான இன்று வருகிறது.
பங்குனி மாத பவுர்ணமியாகும். இன்று அதிகாலை 4.13 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.03 வரை பவுர்ணமி திதி உள்ளது. வழக்கமாக பங்குனி மாத பவுர்ணமி அன்று உத்திரம் நட்சத்திரம் இணைந்து வரும். இந்த நாளை பங்குனி உத்திரமாக கொண்டாடுவர். ஆனால் இந்த ஆண்டு இரண்டும் தனித்தனியே வந்துவிட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கான நேரத்தை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகமே வெளியிட்டுவிட்டது.
"ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை 3.21 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி காலை 05.51 வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெளர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த நேரத்தில் தங்களின் கிரிவல வழிபாட்டினை மேற்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடைசி பவுர்ணமி இதுதான். அடுத்த மாதம் வருவது சித்ரா பவுர்ணமியாகும். எனவே இந்த பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பவுர்ணமி சனிக்கிழமை வந்ததால் இன்று கிரிவலம் செல்வது உகந்தது. நவக்கிரக தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications