கோலாகலமாக நடந்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்! ஓம் சக்தி, பராசக்தி என கோஷம்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என கோஷமிட்டனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வகையில் நேற்று சித்திரை மாதம் பிறந்தது. இன்றைய தினம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் தேரோட்ட விழா நடத்த கடந்த 6ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி தினமும் உற்சவர் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்டவைகளில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வீதியுலா வந்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்வு நடந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் தேரோட்டம் நிகழ்ந்தது. காலை 10.31 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அப்போது மேளதாளங்கள் முழங்கி அதிர்வேட்டுகள் ஒலித்தன. காலை 11.30 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டது விண்ணை அதிரும் அளவுக்கு இருந்தது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி பால்குடம் எடுத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி மருத்துவ முகாம்கள், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரோட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 2000 -க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.












Click it and Unblock the Notifications