திருமலை திருப்பதிக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்! அந்த தெப்பக்குளம்?
திருப்பதி: திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள் டிக்கெட்டில் குறிப்பிடும் நேரத்திற்கு திருமலைக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை திருப்பதியை சுற்றியுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைத்தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது 33 பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதாரண பக்தர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு வாரத்தில் 1.05 லட்சம் பக்தர்களுக்கு சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 1.47 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 1000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் 100 டிக்கெட்டுகள் திருப்பதி விமான நிலையம் வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. திருமலைக்கு பக்தர்கள் தரிசன டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரத்திற்கு வந்தால் போதும். அதுவரை திருப்பதி நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல்வேறு திருத்தலங்களை தரிசிக்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என சியாமளா ராவ் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் ஏழுமலையானை 22.13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 8.67 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதால் உண்டியலில் காணிக்கையாக ரூ 125.35 கோடி செலுத்தி உள்ளனர்.
உலக பிரசித்த பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். தற்போது இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பிரம்மோற்சவத்தின் கடைசி நாள் அங்குள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவது வழக்கம். இந்த நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குளத்தை தூய்மைப்படுத்துதல், குளத்தில் உள்ள சேற்றை அகற்றுதல், குழாய்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
இதனால் ஒரு மாதத்திற்கு கோயில் தெப்பக்குளம் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் குளிக்க இந்த முறை அனுமதி இல்லை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications