நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்..ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிறைவு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து தனது பாதத்தில் சரணாகதி அடையவைத்தார் நம்பெருமாள். மோட்சமடைந்த நம்பெருமாள் நிகழ்வை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து தரிசனம் செய்தனர். இத்துடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது. ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் 20லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் வைணவ பக்தர்களால் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில். இந்த ஆலயத்தில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவானது கடந்த மாதம் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 21 நாள்கள் நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி முதல் ஜனவரி 01 ஆம் தேதி வரை நடைபெற்ற பகல்பத்து விழா நடைபெற்றது. தினசரியும் நம்பெருமாள் அலங்காரமாக ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கநாதரையும் நம்பெருமாளையும் தரிசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இராப்பத்து விழா ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது. அதிகாலையில் நிகழ்ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நம்பெருமாள் ரத்னஅங்கி அணிந்து சேவை சாதித்தார். முத்தங்கி சேவையில் மூலவர் ஸ்ரீரங்கநாதர் சேவை சாதித்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 10 நாளான புதன்கிழமையன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திர புஷ்கரணியில் எழுந்தருளினார். அதன் பின்னர் அங்கு தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீரை தெளித்துக் கொண்டு பரவசமடைந்தனர். மூலவா் முத்தங்கி சேவை நேற்றுடன் நிறைவுற்றதால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு அடைந்துள்ளது. அதிகாலை நம்மாழ்வார் புறப்பட்டு வந்து நம்பெருமாளின் பாதங்களில் சரணாகதி அடைந்தார். துளசி வைத்து மூடி நம்பெருமாள் மோட்சம் அடைந்ததாக காண்பிக்கப்பட்டது. இத்துடன் 21 நாட்கள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி நிறைவடைந்தது. இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் மீண்டும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications