பூஜை அறையில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. மருத்துவ செலவு வருமாம்.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: ஆன்மீக அலை வீசும் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய பூஜை அறை சரியாக அமைந்திருந்தால் அங்கு நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் அங்கு என்னென்ன வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வாஸ்து வளம் தரும்: முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரம் எனப்படுகிறது. பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப்பிடித்து கட்டப்படும் வீட்டிலோ அல்லது அந்த மனையிலோ வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.

பூஜை அறை வாஸ்து: பொதுவாக வீட்டில் பூஜை அறை அமைப்பது முக்கியமானது. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும். ஈசான்ய மூலை பூஜை அறை அமைக்க ஏற்ற இடமாகும். அதே நேரத்தில் படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
சாமி படங்கள்: பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. கண்ட சாமான்களையும் பூஜை அறையில் போட்டு வைக்கக்கூடாது. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ, கீழோ கழிவறையோ, குளியலறையோ இருக்கக்கூடாது. சாமி படங்கள் மேற்குப் பார்த்தபடியும், சாமி கும்பிடுபவர்களின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது. பூஜை அறையில் அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்து வணங்கலாம்.
சிலைகள் வேண்டாம்: பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம். மனிதர்கள் வாழும் வீட்டிற்குள் கோவில் சிலைகள் வைத்து வழிபடு சிறந்தது அல்ல. பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது. சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும். இறந்தவர்களின் போட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.
தென்மேற்கு மூலை: ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் தென்மேற்கில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம். இப்படி அமைத்து கொண்டால், உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பூஜை அறைக்கு மிகப்பொருத்தமான இடம் எது எனில் தென்மேற்கு மூலைதான். வாஸ்துவின்படி வாஸ்து பகவான் வடகிழக்கில் தலை வைத்து தென் மேற்கில் கால் வைத்துப்படுத்து இருப்பதாக சொல்கிறோம்.
பகவானின் காலடியில் பூஜை அறை அமைத்துக் கொண்டால் அந்த வீடு கோவில்போல் இறை அருளோடு திகழும். பூஜை அறையைப் புனிதமான இடமாக கருத வேண்டுமே தவிர, தேவையற்ற பொருட்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வத்தின் சக்தியை குறைத்துவிடும்.
பூஜை அறை கதவுகள்: பூஜை அறைக்குப் போடப்படும் கதவுகள் எப்போதும் இரட்டைக் கதவுகளாக இருப்பது நல்லது. கதவுகளின் அலங்காரங்கள் அவரவர் வசதியைப் பொறுத்தது. கதவுகளில் மணி மாட்டிக்கொள்ளலாம். முடிந்தவரை பூஜை அறை இருட்டாகவே இருக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள பூஜை அறைக்கு உள்ளே போக வாசலானது அந்த அறையின் வடகிழக்கு மூலையில் தான் அமைய வேண்டும்.
செய்யக்கூடாத தவறுகள்: வீட்டுக்குள் பூஜை அறை அமைக்கும் போது, தென்மேற்கு மூலையில் பூஜை அறை அமைவது மிகச்சிறப்பு. இதிலும் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கித் தலைவாசல் வைத்த வீடுகளுக்கு குறிப்பாகத் தென்மேற்கில் பூஜை அறை அமைவது ரொம்பவே சிறப்பானது. சில வீடுகளில் தென்மேற்கு மூலையில் வாஸ்துப்படி சரியாக படிக்கட்டுகள் அமைத்து மேல் தளத்திற்கு செல்லும்படி அமைத்து விட்டு அந்த படிக்கட்டுகளுக்கு கீழே தரைத்தளத்தில் பூஜை அறை அமைப்பார்கள். இது முற்றிலும் தவறு. எப்போதும் எந்த இடமானாலும் படிக்கட்டுகளுக்கு கீழே பூஜை அறை அமைப்பது கூடவே கூடாது. அது அந்த வீட்டின் மகிழ்ச்சியை கெடுத்து விடும். சண்டை சச்சரவை அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க காரணமாகும்.












Click it and Unblock the Notifications