வேலையில் பிரச்சினை தீர..நல்ல வேலை கிடைக்க.. இந்த மந்திரங்களை மறக்காமல் உச்சரியுங்கள்
சென்னை: வேலை எப்போது போகும் என்ற பதை பதைப்பிலேயே பலரது வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. நல்ல வேலை கிடைக்குமா? வேலை கிடைத்தாலும் நிரந்தரமாகுமா? புரமோசனும் சம்பள உயர்வும் வருமா என்று ஏப்ரல் மாதத்தில் பலரது மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடும். வேலையில் இருக்கும் சிக்கல் தீரவும் புரமோனும், சம்பள உயர்வும் கிடைக்கவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும். தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.
வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள், புதிய வேலை தேடுபவர்கள் தொழில்காரகன், ஜீவனகாரகன் சனிபகவான் வாகனமான சனீஸ்வரனுக்கு தினசரியும் சாதம் வைக்க நல்லது நடக்கும் புதிய வேலை கிடைக்கும். வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும்.
ஜாதகத்தில் கர்மஸ்தானம் எனப்படும் 10ஆம் வீடு தொழில் ஜீவனஸ்தானம் ஆகும். 6ஆம் வீடு என்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். 7ஆம் வீடு என்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2ஆம் வீடு என்பது தனஸ்தானம் நமக்கு வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். 11ஆம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11ஆம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். சனி இருந்தால் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவான் சன்னிதிக்குச் சென்று இரண்டு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் சிறப்பினைத் தரும். இது தவிர சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளது.
வீட்டில் உள்ள பூஜை அறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் கோதுமையை கீழே பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி தீபம் போட்டு சூரியபகவானை மனதார நினைத்து வணங்க வேண்டும். தொடர்ந்து 48 வாரங்கள் இப்படி செய்து வர வேண்டும். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் நீங்கும். நிதிநிலைமை உயரும். நிலையான வருமானம் வரும். தீபம் முழுமையாக எரிந்து முடிந்து விட்ட பின்பு, கீழே பரப்பி வைத்திருக்கும் கோதுமையை எடுத்து பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.
நம் வீட்டில் உள்ள கோதுமை மாவில் கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் பரப்பில் வலது கை மோதிர விரலால் 'ஸ்ரீம்' என்ற வார்த்தையை எழுதி அதில் ஒரு சொட்டு நெய் விட்டு, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போல். இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாகப் போட வேண்டும். ஞாயிறு கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதே போல கோதுமை தானம் கொடுக்கலாம் நல்ல வேலையும் நிரந்தர வருமானமும் கிடைக்கும்.
வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியன் உதயமாகும் நேரத்தில் ஒரு அகண்ட பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி நமக்கு நேராக படும்படியாக கிழக்கு நோக்கி அமந்து, அந்த பாத்திரத்தில் உள்ள நீரில் தெரியும் நமது முகத்தை பார்த்தபடி,"ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம் கூறி முடித்த பிறகு, சூரியனை வணங்கி அரச மர வேரில் இந்த நீரினை ஊற்றுவது மிகவும் சிறப்பானது. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 10 ஞாயிற்றுக்கிழமை செய்து வர நல்ல வேலை கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி மனம் உருகி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். இப்படி வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவிலுக்கு செல்ல முடியாத நபர்கள் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் கோவிலுக்கு செல்லலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வணங்குவது சிறப்பானதாக இருக்கும். அதேபோல சஷ்டி நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வர கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும்.
வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக் கிழமை தினத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.
குரு பகவானை வணங்கினால் நல்ல வேலை கிடைக்கும். வியாழக்கிழமையன்று வியாழ ஹோரையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கை மேல் கிடைக்கும்.
ஓம் ஹனுமந்த் வீர் ரகோ ஹத் தீர் கரோ
யே காம் வியாபர் பாதே தந்த்ர டோர் ஹூன்
டூனா டூடே கிரஹக் பாதே கராஜ் சித்
ஹோயே நா ஹோயே தோ அஞ்சனி கி துஹாய்"
என தினசரியும் அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை கூறி வணங்கினால் கை மேல் பலன் கிடைக்கும். நேர்மறையாக நினையுங்கள். மேலே சொன்ன ஏதாவது ஒரு பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் உங்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications