வேலூரில் நடுகாட்டில் காளியம்மன் கோயில்! திருவிழாவில் பக்தர்கள் மீது ஏறிய சாமியாடியால் பரபரப்பு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் காட்டு காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்தானே! அதனால் எங்கு பார்த்தாலும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த மேல் அரசம்பட்டு அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஒடுகத்தூரில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் அடர்ந்த காடு உள்ளது.

இந்த காட்டுக்கு நடுவே காட்டு காளியம்மன் எனப்படும் கிராம தேவதையாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தம் பகுதியில் வசித்து வந்த ஆதி பழங்குடியினத்தவர்கள் இயற்கையை மட்டுமே சார்ந்திருந்தனர். அவர்கள் அந்த அடர்ந்த காடுகளுக்குள் கிடைக்கும் கிழங்குகள், தேன் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டனர்.
மேலும் அந்த கிழங்குகள், தேனை அவர்கள் விற்பனையும் செய்தனர். அப்படிதான் ஒரு நாள் அடர்ந்த காட்டுக்கு சென்று கிழங்கை தோண்டிக் கொண்டிருந்த போது மண்வெட்டியில் இருந்து ரத்தம் கொட்டியதாம். அப்போது அங்கு புகைமூட்டமாக திடீரென ஏற்பட்டது. அசரீரி வந்ததாம்.
"நான் இங்குதான் இருக்கிறேன். உலகை காக்க வனத்தில் குடி கொண்டிருக்கிறேன், நீ திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடு என சொல்லிவிட்டு மறைந்துவிட்டதாம். இதனால் அதிர்ச்சி அடைந்து புல்லரிப்பில் இருந்த அந்த நபர் அசரீரி சொல்லியும் கேட்காமல் திரும்பி பார்த்தாராம். இதையடுத்து ஊர் பெரியவர்களிடம் நடந்ததை கூறினார்.
பிறகு ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வந்து தோண்டி பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. கிழங்கில் அம்மன் வடிவில் ஒரு உருவம் இருந்தது. இதை தோண்டிய நபர் அன்றைய தினமே இறந்துவிட்டாராம். அவரின் சடலத்தை அம்மன் வந்த இடத்தின் அருகேயே அந்த மக்கள் புதைத்துவிட்டனர்.
பின்னர் சில காலத்தில் மூங்கில்களை அமைத்து அம்மனே தனக்கு தானே கோயில் கட்டி அரண் போல் அமைத்ததாம். இதையடுத்து அன்று முதல் இன்று வரை கிழங்கு வடிவிலான அம்மனை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். மேலும் வனத்தில் தோன்றியதால் அந்த அம்மன் வன காட்டு காளியம்மன் என அழைக்கப்பட்டதாம்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வனக் காட்டு காளியம்மன் கோயில் திருவிழா நேற்று முன் தினம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக ஊர் மக்கள் கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். இதையடுத்து குளக்கரையில் இருந்து அம்மனின் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வந்து வனகாட்டு அம்மனுக்கு வைத்து சிறப்பித்தனர்.
வழிநெடுகிலும் குழந்தை வரம், திருமணம் வேண்டி பக்தர்கள் தரையில் படுத்திருந்தனர். அந்த பக்தர்கள் மீது சாமியார் ஏறி நின்று சாமியாடி அருள் வாக்கு கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வனகாட்டு காளியம்மனை பக்தியுடன் வேண்டிக் கொண்டு விரதம் இருந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்கிறார்கள். குழந்தை வரம் வேண்டும் என்றால் மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி மடி ஏந்தி சாமியாடி வரும் போது வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications