நாளை கார்த்திகை தீபம்! விளக்கேற்ற நல்ல நேரம் எது? எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?
சென்னை: கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் எது என்பது தெரியுமா? அது போல் எந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது போல் எத்தனை விளக்குகள் ஏற்றலாம் என்பதையும் பார்க்கலாம்!
கார்த்திகை மாதம் என்றாலே அது தீபங்களுக்கான மாதம் என பொருள் கொள்ளலாம். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாத பவுர்ணமியும் ஒரே நாளில் வருவதைத்தான் கார்த்திகைத் தீபம் என்கிறோம்.

கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது அண்ணாமலையார் தீபம்தான். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபமும் மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபம் நாளை கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மாலை நேரங்களில் அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு பசு நெய் அல்லது பஞ்ச தீப எண்ணெயை கொண்டு விளக்கேற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தீபமாவது நெய்யினால் ஏற்றுவது சிறப்பு.
வீடுகளில் எத்தனை விளக்குகளை ஏற்றலாம் என்பதை பார்க்கலாம். வீடுகளில் குறைந்தபட்சம் 27 விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். இப்படி வழிபட்டால் செல்வம் பெருகும். அதிகபட்சமாக எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். வீட்டு வாசலில் கோலமிட்டு தாம்பூல தட்டு அல்லது மனை வைத்து அதில் 5 முக குத்துவிளக்கை ஏற்றி வழிபடுவது சிறந்தது.
வாசலில் ஏற்றப்பட்ட தீபமானது குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும். அகல் விளக்குகளை சுவாமி அறையிலும் ஏற்ற வேண்டும். பிறகு நம் வீட்டில் உள்ள அறைகளின் வாசற்படிகளில் ஏற்ற வேண்டும். அவரவர் கற்பனைக்கேற்ப டிசைன் டிசைனாக விளக்கேற்றிக் கொள்ளலாம்.
தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூக்களை கொண்டு அமர்த்த வேண்டும். விளக்கை அணையுங்கள் என சொல்லக் கூடாது. விளக்கை குளிர வை என சொல்ல வேண்டும். தீபங்களை வடக்கு திடை நோக்கி ஏற்றினால் அறிவு வளரும், செல்வ வளர்ச்சி தரும்.
கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் துன்பங்களை நீக்கும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். அது போல் தோஷங்களும் மறையும். விளக்கை எந்த காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் ஏற்றவே கூடாது.
விளக்கை மாலை வேளைகளில் மட்டுமே ஏற்ற வேண்டும். அதிலும் திருவண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் மாலை 6.05 மணிக்கு ஏற்றலாம். அப்போது பொரி உருண்டை செய்து படையலிடலாம்.
மனம் முழுக்க சிவன் நாமத்தை சொல்ல வேண்டும். அன்று அசைவம் சாப்பிடக் கூடாது. தலை விரித்துக் கொண்டு விளக்கேற்ற கூடாது. விளக்கில் மஞ்சள் குங்குமம் இட்டு ஏற்ற வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கின் அடியில் காசு வைத்து ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
அது போல் இன்றைய தினம் டிசம்பர் 12 ஆம் தேதி பரணி தீபமாகும். இது காலை 8.20 மணிக்குத் தொடங்கி நாளை காலை 6.50 மணி வரை பரணி நட்சத்திரம் என்பதால் எமனுக்கு பிடித்த பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குறைந்தபட்சம் 5 விளக்குகளை ஏற்ற வேண்டும்.
ஒரு தாம்பூலத்தில் கோலமிட்டு அனைத்து திசைகளையும் பார்க்கும்படி நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். எனவே இன்று உங்கள் வீடுகளில் பரணி தீபத்தை ஏற்றி மகாலட்சுமி அருள் பெறுங்கள்.












Click it and Unblock the Notifications