Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட இந்தியாவில் ராசியான மாசம்ன்னு கொண்டாடுறாங்க.. தென் இந்தியாவில் ஆடி-ன்னா ஆடிப்போறாங்க! ஏன் இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட இந்தியாவில் ஷ்ரவன் என்று சொல்லப்படும் மாதமே தென்னிந்தியாவில் ஆடி மாதம் எனப்படுகிறது. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலரை வியக்க வைக்கிறது. வட இந்தியர்கள் ஷ்ரவன் மாதத்தை மங்களகரமானதாகவும், நல்ல காரியங்கள் செய்வதற்கும் உகந்த மாதமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆனால், தென்னிந்தியாவில் ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதில்லை; புதுமணத் தம்பதிகள் ஒன்று சேர்வதைத் தவிர்ப்பது போன்ற சில விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. இது ஏன் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஷ்ரவன் மாதம் (வட இந்தியா)

வட இந்தியாவில் இந்துக்களின் நாட்காட்டியில் முக்கியமான மாதம் ஷ்ரவன் அல்லது சவான் எனப்படுகிறது. இந்த மாதம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது வழிபாடு நடத்துவதற்கும், விரதங்கள் மேற்கொள்வதற்கும், கடவுளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் மாதமாகவும் அமைந்துள்ளது.

spirtuality aadi shravan

பொதுவாக இந்த மாதம் பருவமழைக் காலத்தில் வரும். அதாவது, வட இந்தியாவில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இது கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாதத்தில் நடத்தப்படும் சடங்குகளில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஷ்ரவன் மாதம் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் ஷ்ரவன் மாதத்தில் மக்கள் ஆன்மீகத்துடன் ஒன்றிணைந்து வாழ விரும்புகிறார்கள். அதே வேளையில், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஆடி மாதம் என இது கொண்டாடப்படுகிறது.

சந்திர நாட்காட்டி Vs சூரிய நாட்காட்டி

இந்த வேறுபாட்டிற்குக் காரணம் சந்திர நாட்காட்டி (Lunar Calendar) ஆகும். பொதுவாகச் சூரிய நாட்காட்டி, சந்திர நாட்காட்டி என இரு வகைகள் உள்ளன. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது சந்திர நாட்காட்டி. இது, சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாட்காட்டியிலிருந்து வேறுபட்டது.

ஆடி மாதமானது பொதுவாக ஜூலை 17ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதேபோல், ஷ்ரவன் மாதம் என்பது ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

ஷ்ரவன் மாதமும் ஆடி மாதமும் இந்தியா முழுவதும் ஒரே நாளில் தொடங்குவதில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இதற்குக் காரணம், இந்தியாவில் இரு வேறு சந்திர நாட்காட்டி முறைகள் பின்பற்றப்படுவதே ஆகும்.

வட இந்தியாவில் பௌர்ணமியை வைத்துப் பண்டிகைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப் பிறகே தொடங்கும். இந்த நடைமுறைப்படி, ஷ்ரவன் மாதம் வழக்கமாக ஜூலை மத்தியில் தொடங்கி ஆகஸ்ட் ஆரம்பத்தில் முடிவடைந்துவிடும்.

தென் மற்றும் மேற்கு இந்தியாவில் அமாவாசையை வைத்து நாட்காட்டி பின்பற்றப்படுகிறது. எனவே, இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு தொடங்கும். அந்த வகையில், ஆடி மாதம், ஜூலை மத்தியில் தொடங்கி, ஆகஸ்ட் பிற்பகுதி வரை இருக்கும்.

இந்தியா முழுவதும் வானிலை, பருவமழைக் காலம், வழிபடும் முறைகளில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், நாட்காட்டியில் உள்ள வேறுபாட்டால் பண்டிகை தேதிகள், விரத வழிபாடுகள், சடங்குகள் கடைப்பிடிப்பது போன்ற அனைத்தும் மாறுபடுகின்றன.

ஷ்ரவன் மாதத்தின் முக்கியத்துவம் (வட இந்தியா)

வட இந்தியாவில் ஷ்ரவன் மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திங்கட்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள். சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, 'ஓம் நமச்சிவாய' மந்திரம் ஓதுகிறார்கள். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது அமைதியையும், வளத்தையும், ஆன்மீக பலத்தையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மாதத்தில் முக்கியமானது கன்வார் யாத்ரா. இதில் லட்சக்கணக்கான சிவபக்தர்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் புனித கங்கை நதிக்கு வெறுங்காலுடன் நடந்து சென்று, பானைகளில் கங்கை நீரை எடுத்து வந்து, தங்கள் ஊர்களில் உள்ள உள்ளூர் கோயில்களில் இருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

இந்த ஷ்ரவன் மாதத்தில் வட இந்தியர்கள் உணவு உட்கொள்ளும் முறையிலும் மாறுபடுவார்கள். இந்த மாதம் முழுக்கச் சைவ உணவையே உண்பார்கள். வெங்காயம், பூண்டு, மது, காபி போன்றவற்றை உட்கொள்ள மாட்டார்கள். தங்கள் மனதையும் உடலையும் சுத்தப்படுத்துவதே இந்த உணவுக்கட்டுப்பாட்டின் பிரதான நோக்கம் ஆகும்.

அதுபோல், ஒரு நாளாவது விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி போன்றவற்றால் செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறார்கள். இது பாரம்பரியமாக உண்ணப்படும் உணவு என்பதாலும், இந்த பருவமழைக் காலத்தில் உடலில் மெட்டபாலிசம் குறைவதைச் சரிசெய்யும் என்பதாலும், இந்த உணவுப் பொருட்களை வட இந்தியர்கள் உண்கிறார்கள்.

ஆடி மாதத்தின் முக்கியத்துவம் (தென் இந்தியா)

இப்போது ஆடி மாதம் குறித்துப் பார்க்கலாம். ஆடி மாதத்தில் எந்தச் சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இது கடவுளுக்கு உகந்த மாதமாகவே கருதி, அம்மனுக்குக் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளில் தென்னிந்தியர்கள் ஈடுபடுவார்கள். இந்த ஆடி மாதத்தில்தான் குலதெய்வ வழிபாடும் நடத்தப்படுகிறது.

கர்நாடகா

கர்நாடகாவில் ஆடி மாதம் என்பது ஆன்மீகம் மற்றும் தனித்துவமான சமூகப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கும் மாதமாகும். 'ஆடியில் கட்டிக்கொண்டால் சித்திரைக்குப் புள்ளை வரும்' என்ற கூற்றுப்படி, புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள். இது எதற்காக என்றால், சித்திரை மாதம் கடுமையான வெயில் என்பதால், அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால், குழந்தைக்கு வியர்க்குரு, உடல் சூடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதாலேயே பிரித்து வைக்கிறார்கள். சில ஜாதிகளில் ஆடி மாதம் மருமகளும், மாமியாரும் ஒரே வீட்டில் தங்க மாட்டார்கள். இந்த மாதத்தில் திருமணம் கூட செய்ய மாட்டார்கள். ஆடி அமாவாசையான ஜூலை 24ஆம் தேதி, திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகக் கோயில்களில் வழிபடுவார்கள்.

ஆந்திரா - தெலுங்கானா

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஆடி மாதம் ஒரு புனித மாதமாகும். இந்த மாதத்தில் பொனாலு என்ற பண்டிகை அனைத்து ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் மகா காளியை மக்கள் வழிபடுகிறார்கள். அரிசி, வெல்லம், தயிர் உள்ளிட்டவைகளை வைத்துச் சாமிக்குப் படைக்கிறார்கள்.

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆடி மாதம் வரும் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 16ஆம் தேதி முடிவடைகிறது. இந்த மாதம் பெண்களுக்கு உகந்த மாதமாகும். அம்மனுக்குக் கூழ் வார்த்தல், குலதெய்வ வழிபாடு, சுமங்கலிப் பிரார்த்தனைகள் உள்ளிட்டவை செய்யப்படும். ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். அதுபோல், ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப் பெருக்கு முக்கியமானதாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் புனித நதிகளில் பூக்கள், உணவுப் பொருட்கள், விளக்குகளை ஏற்றி விடுவார்கள்.

தென்னிந்தியாவில் மாநிலங்களுக்கு ஏற்பப் பெயர்களும் சடங்கு முறைகளும் மாறலாம். ஆனாலும், அந்த மாதத்தில் மக்களுக்கு இருப்பது ஒரே நம்பிக்கையும் பக்தியும்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+