சபரிமலை ஐயப்பனுக்கு தேங்காயில் நெய் ஊற்றி கொண்டு செல்வது ஏன் தெரியுமா?
பத்தினம்திட்டா: சபரிமலைக்கு பக்தர்கள் கொண்டு செல்லும் நெய் தேங்காயின் ரகசியம் உங்களுக்கு தெரியுமா, இது எதற்காக கொண்டு செல்லப்படுகிறது. இதன் பொருள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது: இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் உங்களுக்கு தெரியுமா? ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு பக்தர்கள் கொண்டு செல்லும் இருமுடியில் இருக்கும் முக்கியமான பொருள் நெய் தேங்காய்தான்!

இந்த நெய் தேங்காயானது இருமுடி கட்டுவதற்கு முன்பாகவே தேங்காயின் மூன்று கண்களில் ஒரு கண்ணில் துளையிட்டு அதில் உள்ள தண்ணீரை வெளியே எடுப்பார்கள். பிறகு அந்த தேங்காயை காயவைத்து, அதில் காய்ச்சிய பசு நெய்யை ஊற்றி அதை மூடுவதற்குரிய மூடியை போட்டு அதன் மேல் உளுந்து மாவினால் ஆன பசையை கொண்டு காட்டன் துணியால் ஒட்டிக் கொள்வார்கள். அப்போதுதான் நெய்யும் அந்த ஒரு கண்ணில் போட்ட மூடியும் வெளியே வராது.
இந்த நெய் தேங்காயின் ரகசியம் என்பது ஐயப்பனின் திருவடியை சரணடைவது என்பதுதான். இந்த தேங்காயின் மீதுள்ள ஓட்டு பகுதி நமது பூத உடலை குறிக்கும். தேங்காயின் உள்ளே உள்ள நெய்யானது நம் உயிரை குறிக்கும். இந்த தேங்காயை பத்திரமாக எடுத்துச் சென்று அதில் உள்ள நெய்யை ஐயப்பனின் அபிஷேகத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
அந்த தேங்காயை சன்னதியின் எதிரே உள்ள தீயில் எரிய விட்டுவிட வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் ஐயப்பனே என் உயிரை உன் பாதத்தில் ஒப்படைத்துவிட்டேன். என் உடலை தீயிட்டு சமர்ப்பித்துவிட்டேன். இனி என் சுகத் துக்கங்களையும் வாழ்க்கையையும் நீ பார்த்துக் கொள் என்பதுதான் இதன் அர்த்தம் ஆகும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்கள் இருமுடியை கொண்டு செல்வார்கள். அந்த இருமுடியில் ஒரு பகுதியில் நெய் தேங்காயும் மறு பகுதியில் அபிஷேக பொருட்களும் இருக்கும்.
ஆண்டுக்கு 5 முறை மட்டுமே சபரிமலையின் நடை திறந்திருக்கும். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்துவிட்டு ஐயப்பன் தவம் செய்த இடமே சபரிமலையாகும். 18 மலைகளுக்கு இடையே இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால். ஐயப்பன் கோயிலின் பிரசாதம் என்றால் அரவணை பாயாசம், அப்பம்தான். இரவு நேரத்தில் ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டதும் கோயில் நடை சாத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications