திருப்பதி ஏழுமலையான் தாடையை கிழித்த கடப்பாரை! ரத்தத்தை நிறுத்த இன்றும் பச்சை கற்பூரத்தால் மருந்து!
திருப்பதி: கடப்பாரையால் பட்ட காயத்திலிருந்து வரும் ரத்தத்தை நிறுத்த இன்றளவும் திருப்பதி ஏழுமலையானின் தாடைக்கு பச்சை கற்பூரம் வைக்கப்படுகிறது. இந்த கடப்பாரையை இன்றும் திருப்பதி ராஜகோபுரம் அருகே தரிசனம் செய்துவிட்டு செல்லலாம்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். ஆனால் அவர்கள் திருப்பதி ஏழுமலையானை முறைப்படி வணங்குகிறார்களா என்பது சந்தேகம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு திருப்பதியில் எப்படி வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

திருப்பதிக்கு செல்லக் கூடியவர்கள் கீழ் திருப்பதியில் உள்ள அலர்மேல் மங்கை கோயில் எனும் பத்மாவதி தாயார் ஆலயத்திற்கு சென்றுவழிபட்டுவிட்டு திருப்பதி மலையேறி, அங்குள்ள தீர்த்தவாரியில் குளித்துவிட்டு அதன் அருகே இருக்கும் ஆதி வராக மூர்த்தியை வணங்க வேண்டும்.
அதன் பிறகு பாலாஜியை தரிசிக்க வேண்டும். கோயில் ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழையும் போது அங்கு செல்லும் தண்ணீரில் கால்களை கழுவிவிட்டு பிறகு செல்ல வேண்டும். உள்ளே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் தீர்த்தம், துளசி பிரசாதம் பெற்றுக் கொண்டு சுவாமிக்கு பின்புறம் கோபுரத்தின் மீது திருமலைவாசன் அங்கும் காட்சி தருகிறார்.
பக்தர்கள் எளிதாக பார்க்கும் வகையில் அங்கு வெள்ளியால் திருவாட்சி போடப்பட்டு அம்புக்குறியும் போடப்பட்டிருக்கும். இதை அங்குள்ள மண்டபங்களின் படி மீது ஏறி தரிசனம் செய்ய வேண்டும். ராஜகோபுரம் உள்ளே நுழையும் போதே அதன் வலது பக்கத்தில் அனந்தாழ்வார் கடப்பாரை இருக்கும். அதை தரிசனம் செய்ய வேண்டும்.
திருமலை மீது உள்ள தீர்த்தவாரியை அனந்தாழ்வார்தான் தோண்டினார். அப்போது பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது. அவ்வாறு தோண்டும் போது ஏழுமலையானின் தாடை பகுதியில் பட்டுவிட்டது. இதனால் ரத்தம் பீறிட்டது. இதற்காக பச்சை கற்பூரம் வைக்கப்பட்டதும் ரத்தம் நின்றுவிட்டது.
இன்றும் வெங்கடாஜலபதியின் தாடையில் இருந்து ரத்தம் கசிவதாகவும் அதை நிறுத்த பச்சை கற்பூரம் வைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. 5 பலிபீடம் உள்ள ஒரே கோயில் திருப்பதி மட்டும்தான். சுவாமி தரிசனம் செய்ய உள்ளே நுழையும் போது கொடிமரத்தை வணங்கியும் பலிபீடத்தை பார்த்தும் உங்களின் எதிர்மறை எண்ணங்களை இறக்கி வைக்கவும்.
சுவாமியை வணங்கும் போது கண்களை மூடக் கூடாது. இறைவனை பாதத்திலிருந்து தரிசனம் செய்ய வேண்டும். பெருமாளை பாதத்திலிருந்து தரிசனம் செய்யும் அளவுக்கெல்லாம் நேரம் இருக்காது. வரிசையில் செல்லும்போதே கண் குளிர பார்க்க வேண்டும். பிறகு அங்கிருந்து வெளியே வந்தால் தீர்த்தம் கொடுக்கப்படும்.
திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் ஏழுமலையான் மனது வைத்தால்தான் முடியும். தினமும் விளக்கேற்றும் போது, "பெருமாளே உன்னை தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு தா" என வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications