ஏர்டெல் எடுத்த அதிரடி ஆக்ஷன்.. மோசடி கும்பலுக்கு வேட்டு.. 2.5 மாதத்தில் 800 கோடி ஸ்பேம் கால்ஸ்!
சென்னை: ஏர்டெல் நிறுவனம், ஸ்பேம் அழைப்புகள், மெசேஜ்கள் பற்றி அலர்ட் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி இரண்டரை மாதங்களுக்குள் சுமார் 800 கோடி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் 80 கோடி ஸ்பேம் SMSகளை கண்டறிந்து வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் செய்துள்ளது. எந்த நேரங்களில் எந்த நாட்களில் ஸ்பேம் அழைப்புகள் அதிகம் வருகின்றன என்பதையும் கண்டறிந்து கூறியுள்ளது ஏர்டெல்.
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே வேகத்தில் சைபர் குற்றங்களும், தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. ஸ்பேம் அழைப்புகள், மெசேஜ்களால் ஒருபுறம் தலைவலி.. மறுபுறம் மோசடி பயம் என வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

60 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக மூன்று SPAM அழைப்புகள் வருகிறது என்றும் 87 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை ஸ்பேம் அழைப்புகள் வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் பல சிக்கல்களைக் கொண்டு வருகின்றன. ஸ்பேம் கால்கள் வாயிலாக ஏராளமானோர் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர். இந்நிலையில், இதனை தடுப்பதற்காக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தது ஏர்டெல் நிறுவனம்.
ஸ்பேம் அழைப்புகள், ஸ்பேம் மெசேஜ்களை கண்டறிந்து அதை தவிர்க்க நெட்வொர்க் இண்டலிஜென்ஸ் உடன் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸை இணைத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்தியது ஏர்டல். இதன் மூலம், ஏர்டெல் யூசர்களுக்கு ஸ்பேம் கால்கள் அல்லது மெசேஜ்கள் வந்தால் அதுவே அலர்ட் செய்ய்ம்.
ஸ்பேமுக்கு எதிராகப் போராடும் இந்த தீர்வை ஏர்டல் நிறுவனம் அறிமுகப்படுத்தி வெறும் இரண்டரை மாதங்களுக்குள் 8 பில்லியன் அதாவது 800 கோடி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் 80 கோடி ஸ்பேம் மெசேஜ்களைக் கண்டறிந்து அடையாளப்படுத்தியுள்ளது ஏர்டெல்.
ஏர்டெல் நிறுவனம் கடந்த இரண்டரை மாதங்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் ஸ்பேம் அழைப்பாளர்களை அடையாளம் கண்டுள்ளது. இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்கு எதிராக 252 மில்லியன் தனிப்பட்ட வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளதோடு, அதன் மூலம் ஸ்பேம் கால்களுக்கு பதிலளிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 12 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்துவோருக்கு வரும் அனைத்து அழைப்புகளிலும் 6 சதவீதம் அழைப்புகள் ஸ்பேம் அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து SMSகளிலும் 2 சதவீதம் ஸ்பேம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஸ்பேம் அழைப்பாளர்களில் 35 சதவீதம் பேர் லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

டெல்லியில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்ச ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் மேற்கு உத்தர பிரதேச வாடிக்கையாளர்கள் அதிக ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றுள்ளனர். ஸ்பேம் மெசேஜ்களைப் பொறுத்தவரை, குஜராத்தில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளன. மும்பை, சென்னையிலும் அதிகமான ஸ்பேம் எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன.
ஸ்பேம் அழைப்புகளில் 76 சதவீதம் ஆண் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் வயது அடிப்படையில் பார்த்தால், 36 முதல் 60 வயதிற்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கே அதிகளவிலான ஸ்பேம் கால்கள் வந்துள்ளன. மொத்த ஸ்பேம் அழைப்புகளில் 48 சதவீதம், 36 - 60 வயது கொண்டவர்களுக்குத்தான் வந்துள்ளது. 26 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு 26 சதவீத ஸ்பேம் அழைப்புகள் வந்துள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஸ்பேம் அழைப்புகளில் 8 சதவீதம் மட்டுமே வந்துள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த டேட்டா, ஸ்பேம் செயல்பாடுகள் குறிப்பாக எந்தெந்த நேரங்களில் அதிகம் நடைபெறுகின்றன என்பதையும் தெரிவிக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் காலை 9 மணி முதல் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கின்றன. ஸ்பேம் செயல்பாட்டின் உச்சம் மதியத்தில் இருந்து மாலை 3 மணி வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்பேம் அழைப்புகள் மற்ற நாட்களை விட சுமார் 40% குறைகிறது. சண்டே என்பதால் ஸ்பேம் காலர்களும் லீவ் விட்டுவிடுகிறார்கள் போலும்.












Click it and Unblock the Notifications